Pages

Sunday, March 23, 2014

+2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற்கூட்டம் நடத்த தேர்வுத்துறை தடை

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற் கூட்டம் நடத்த தடைவிதித்து தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மாநிலத்தில் 66 மையங்களில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் கட்டமாக முதன்மை தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வரும் 24ம் தேதி உதவி தேர்வாளர்கள் திருத்தும் பணியை மேற்கொள்கின்றனர். முதல் கட்டமாக மொழிப் பாட விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் பிற பாட விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளது.
விடைத்தாள் திருத்தப் பணி நடைபெறும் மையங்களில், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும் காலையில் வாயிற்கூட்டம் நடத்தப்படும்.இது காலை 9:00 மணிக்கு துவங்கி பகல் 12:00 மணிவரை நடைபெறும். அதன் பிறகு ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணியை அவசர, அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதனால், பல மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவதும், அவர்கள் விடைத்தாளை மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிப்பது ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
பல விடைத்தாள்கள் முறையாக திருத்தாத காரணத்தினால், மதிப்பெண் குறைவாக இருப்பதும், மறு மதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் பெறுவது அதிகரித்து வருகிறது.
கடந்தாண்டில் இதுபோன்று கவனக்குறைவாக விடைத்தாள் திருத்தியது தொடர்பாக 1,500 ஆசிரியர்களுக்கு "மெமோ' வழங்கி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனைத் தவிர்க்க, இந்தாண்டு தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், விடைத்தாள் திருத்தும் மையங்களில், வாயிற்கூட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
தேர்வுத் துறை இயக்குனரின் உத்தரவால், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.