சென்னையை அடுத்த விச்சூர் ஊராட்சியில் மேல்நிலைப் பள்ளி அமைக்க, அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் எந்த பணியும் நடக்காததால் அந்த பகுதி மாணவர்கள், 10ம் வகுப்போடு தங்கள் படிப்பை நிறுத்திவிட்டு, செங்கல் சூளைகளில் வேலைக்கு செல்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள விச்சூர் ஊராட்சியில், அரசு புறம்போக்கு நிலத்தில் தனியார் நிறுவனம் சார்பில், ஐந்து அறைகள் கொண்ட பள்ளி கட்டப்பட்டது. அந்த கட்டடத்தில் இயங்கி வந்த ஊராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி, கடந்த 2009ல் அரசு உத்தரவிட்டது.
தற்போது உயர்நிலைப் பள்ளியில் 177 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்களில் 172 மாணவர்கள், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள். அந்த பள்ளியில் 10ம் வகுப்பு முடித்ததும், பிளஸ் 2 படிக்க, பத்து கி.மீ., தொலைவில் உள்ள மணலி புதுநகர் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு பேருந்துகள் மாறி பயணிக்க வேண்டும்.
விச்சூர் கிராமப் பகுதி என்பதால், போதிய பேருந்து வசதி இல்லை. அதனால், பெரும்பாலான மாணவர்கள், 10ம் வகுப்புடன் தங்கள் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். மாணவர்களின் எதிர்காலம் கருதி விச்சூர் பகுதியில், மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என அந்த பகுதிவாசிகள், மாவட்ட கலெக்டரிடம் கடந்த 2011ம் ஆண்டு மனு அளித்தனர்.
இதை தொடர்ந்து ஒரு கோடி ரூபாய் செலவில், அந்த பகுதியில் மேல்நிலைப் பள்ளி அமைக்க அரசு முடிவு செய்தது. ஆனால், ஊராட்சிக்கு சொந்தமாக பட்டா இடம் எதுவும் இல்லாததால், அந்த நிதி திரும்பவும், அரசுக்கே சென்றுவிட்டது.
இதுகுறித்து விச்சூர் பகுதியை சேர்ந்த, ராஜேந்திரன் கூறுகையில், "10ம் வகுப்பு முடித்ததும், மணலி புதுநகரில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல, முதலில், ஈச்சங்குழிக்கும், பின், மணலி புதுநகருக்கும் இரண்டு பேருந்துகளில் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், செங்கல் சூளை உள்ளிட்ட இடங்களில் கூலி வேலைக்கு அனுப்பி விடுகிறோம்" என்றார்.
விச்சூர் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ண கோபால் கூறுகையில், "அருகிலேயே தொடக்கப் பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கு தனியார் நிறுவனம் கட்டி கொடுத்த வகுப்பறை, உயர்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அது போதுமானதாக இல்லாததால், திறந்த வெளியில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுகிறது" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "ஆசிரியர்களுக்கு ஓய்வறை, மாணவர்களுக்கு கழிப்பறை வசதி எதுவும் இல்லை. நபார்டு வங்கி மூலம், ஒரு கோடி ரூபாய் செலவில் விடுதி மற்றும் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட 2012ல் அரசு முன்வந்தது. இதை தொடர்ந்து ஊராட்சி தலைவரிடம் பட்டா இடம் ஒதுக்கி தரும்படி பலமுறை வலியுறுத்தினோம். அவர் கண்டுகொள்ளாததால், அந்த பணம், சில மாதங்களுக்கு முன் அரசுக்கே திரும்பி விட்டது. அந்த நிதியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு இருந்தால் விச்சூர் ஊராட்சியிலேயே, மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு இருக்கும்" என்றார்.
விச்சூர் ஊராட்சி தலைவர் வெஸ்லி கூறுகையில், "ஊராட்சிக்கு சொந்தமாக பட்டா இடம் எதுவும் இல்லை. அரசு புறம்போக்கு இடத்தில் பள்ளி கட்டடம் கட்ட, கலெக்டரிடம் மனு கொடுத்தோம். ஆனால் பள்ளி கல்வி முதன்மை அலுவலர் பெயருக்கு பட்டா கொடுத்தால் மட்டுமே, புதிய கட்டடம் கட்டப்படும் என கல்வி துறையில் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வி துறையுடன் பேசி தீர்வு காணாமல் மெத்தனமாக செயல்படுவதால், மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர முடியாத சூழல் உள்ளது" என்றார்.
இப்படி ஒவ்வொருவரும் பொறுப்பை தட்டிக் கழித்து வருவதால், மாணவர்களின் எதிர்காலம் வீணாகி வருகிறது. இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியரும், கல்வி துறை உயர் அதிகாரிகளும் நேரடியாக தலையிட்டால் மட்டுமே விச்சூரில் மேல்நிலைப்பள்ளி சாத்தியமாகும்.
NAMADHU SALARY UYARVUKU PORODUKIROM.NAMATHU URIMAIGALUKAGA KURAL KODUKA THAYANGAMAAL SEYALPADUM AASIRIYARKALAKIYA NAAM INTHA MANAVARGALUKAGA NAAM ANAIVARUM SERNTHU YEN KALVIKOODAM KATTA KAIKODUKALAME!KAI KODUKA MUN VARUVEERGALA ?????????
ReplyDelete