"பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டம் எதுவும், அரசின் பரிசீலனையில் இல்லை. தற்போதுள்ள நடைமுறையே தொடரும்" என மத்திய அரசு நேற்று அறிவித்தது.
காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான ஜனார்த்தன் திவிவேதி பேசுகையில், "ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பொருளாதார ரீதியில், இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்" என 2 நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார்.இந்த விவகாரத்தை ராஜ்யசபாவில் எழுப்பி, எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள், "மத்திய அரசு, ஏழைகளுக்கு எதிராக செயல்படுகிறது" என கோஷம் எழுப்பினர். இதையடுத்து, பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் ராஜிவ் சுக்லா, இதற்கு விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், "பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு அளிக்கும் திட்டம் எதுவும், அரசின் பரிசீலனையில் இல்லை. தற்போதுள்ள நடைமுறையே தொடரும்" என்றார்.
இது குறித்து, காங்கிரஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "இட ஒதுக்கீடு குறித்து, திவிவேதி கூறியது, அவரின் சொந்த கருத்து; அதற்கும், காங்கிரசுக்கும் சம்பந்தமில்லை" என தெரிவிக்கப்பட்டிருந்தது. கட்சித் தலைவர் சோனியாவும் இதையே தெரிவித்தார்.
No comments:
Post a Comment