Pages

Tuesday, February 25, 2014

10ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் வருமா? முடிவுக்கான கோப்பு, முதல்வர் மேஜையில் "கொர்"

பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், வழக்கமான பொது தேர்வு இருக்குமா அல்லது முப்பருவ கல்வி முறையின்படி, தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படுமா என்பன குறித்து, கல்வித்துறையில், பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இது தொடர்பான கோப்பு, முதல்வரின் அலுவலகத்தில், ஆறு மாதங்களாக, கிடப்பில் உள்ளதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.


தமிழகத்தில் தற்போது, ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை, அமலில் உள்ளது. இதை தொடர்ந்து, 10ம் வகுப்பிற்கும், முப்பருவ கல்வி முறை, நீட்டிப்பு செய்யப்படுமா அல்லது தற்போதுள்ள முறையே தொடர்ந்து பின்பற்றப்படுமா என்பது தெரியாமல், ஆசிரியர், மாணவர், பெற்றோர் என, அனைவரும் குழப்பம் அடைந்துள்ளனர். இது தொடர்பான கோப்பு, முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி, ஆறு மாதங்கள் ஆவதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எச்சரிக்கை:
தேர்தல் பரபரப்பில் மூழ்கியுள்ள முதல்வரின் கவனத்திற்கு, இந்த விவகாரத்தை, எப்படி எடுத்துச் செல்வது என தெரியாமலும், அடுத்த கல்வி ஆண்டு துவக்கம், நெருங்கிக் கொண்டிருப்பதால், என்ன செய்வது என்று புரியாமலும், அதிகாரிகள், திணறுகின்றனர். எந்த முடிவாக இருந்தாலும், முன்கூட்டியே அறிவித்தால், யாருக்கும், எந்த பிரச்னையும் இருக்காது. கடைசி நேரத்தில், பெரிய அளவில் மாற்றத்தை அறிவித்தால், அது, மாணவர்களுக்கு, பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என, ஆசிரியர் எச்சரிக்கின்றனர். இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளி திறப்பதற்கு, இன்னும், மூன்று மாதங்கள் உள்ளன; அதற்குள், முடிவை அறிவித்து விடுவோம்' என்றார்.

பெரும் பாதிப்பு:
தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலர், சத்தியமூர்த்தி கூறுகையில், ''பொது தேர்வு என்ற முறை நீடிக்க வேண்டும் என்பது தான், அனைவரின் கருத்து. பொது தேர்வு முறையை கைவிட்டால், மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.