Pages

Wednesday, January 22, 2014

வெயிட்டேஜ் முறை அறிமுகத்தால் மூத்த ஆசிரியர்கள் அவதி!

இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால், சீனியாரிட்டியில் முன்னிலை பெற்ற ஆசிரியர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், பணி அனுபவத்திற்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க மூத்த ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு மூன்றாவது முறையாக, தமிழகத்தில் நடத்தப் பட்டது. இதில், சுமார் 6 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்று தேர்வெழுதினர். இதில், முதல் தாளுக்கான தேர்வில் 12 ஆயிரத்து 433 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் மூலம் 3000 இடைநிலை ஆசிரியர்கள் நிரப்பப்படவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்காக, பாடவாரியாக காலி பணியிடங்களை தொகுக்கும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு தற்போது, முடிவடைந்ததால், பட்டதாரி ஆசிரியர்கள் போன்று, வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று சமீபத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்தது.
அதன் படி, தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வரும்,
சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், வேலைவாய்ப்பு பதிவுக்கு முன்னுரிமை குறித்து எவ்வித தகவல்களும் பெறப்படவில்லை. 
பணி அனுபவத்திற்கும் மதிப்பில்லாததால், மூத்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெயிட்டேஜ் முறையில், இடைநிலை ஆசிரியர்கள் தேர்வில், பிளஸ் 2 மதிப்பெண், ஆசிரியர் பட்டயத்தேர்வு மதிப்பெண் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு பணி நியமனம் செய்யப்படவுள்ளது. தற்போதைய கல்வி முறையும், மதிப்பெண் வழங்கும் முறையும், 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்பு இருந்த கல்வி முறை, மதிப்பெண் வழங்கும் முறையை ஒப்பிடுவது என்பது சரியாக அமையாது.

இதுகுறித்து, கோவை மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ""கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மாவட்ட அளவில்
சீனியாரிட்டி பெற்றவர்கள் தேர்வு
செய்யப்பட்டுவந்தனர். பின்பு, மாநில அளவில் சீனியாரிட்டி என்று மாற்றப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டனர்.
தற்போது, சீனியாரிட்டியில் முன்னிலையில் இருக்கும் என்னை போன்றோர், வெயிட்டேஜ் முறையால் பின்னுக்கு தள்ளப்படும் வாய்ப்பு எழுந்துள்ளது. 20 வருட

அனுபவங்களுடன் காத்திருக்கும் என்னை போன்ற பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பணி அனுபவத்திற்கும், வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுக்கவேண்டியது அவசியம்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.