"தனியார் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் எதற்கெடுத்தாலும் அபராத கட்டணம் வசூலிப்பதற்கு அச்சிடப்பட்ட ரசீது எதுவும் வழங்குவதில்லை" என குற்றஞ்சாட்டி, பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் காந்திநகர் பகுதியில் செயின்ட் ஆன்டனி என்ற தனியார் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் தாமதமாக வருவதற்கும், ஷூ அணியாமல் சாதாரண செருப்பை அணிந்து வரும் மாணவர்கள் மற்றும் விடுப்பு எடுத்தால் என, எதற்கெடுத்தாலும் அபராத கட்டணம் பெயரில் 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை மாணவர்களிடம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்படி வசூல் செய்யும் பணத்துக்கு அச்சிட்ட ரசீது ஏதும் வழங்கப்படுவது இல்லை.
மாணவர்களிடம் கறார் வசூலில் ஈடுபடும் பள்ளி மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இங்கு, 9, 10, 11, 12ம் வகுப்பு படிக்கும் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களது வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, நேற்று முன்தினம் காலை பள்ளி முன்பு திரண்டனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.
தகவலறிந்த கும்பகோணம் மேற்கு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவர்களிடம் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என கூறியதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பிச் சென்றனர்.
No comments:
Post a Comment