காலமுறை ஊதியம், தேசிய குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜன. 27ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைமையிடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் கெüரவத் தலைவரும், அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலருமான கு. பாலசுப்பிரமணியன் திருச்சியில் சனிக்கிழமை அளித்த பேட்டி:
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இவர்கள் 32 அரசு ஆவணங்களைப் பராமரிப்பது உள்ளிட்ட தங்களின் பணிகளைத் தாண்டி, தடுப்பூசி போடுவது, வளரிளம் பெண்களுக்கு நாப்கின் வழங்குவது போன்ற பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
எனவே இதற்காக தனி ஊதியம் வழங்க வேண்டும். கல்வித் தகுதிக்கேற்ப அனைத்துத் துறை காலிப் பணியிடங்களிலும் நிரப்ப வேண்டும். ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு கடைசி மாத ஊதியத்தில் சரிபாதியையோ அல்லது தேசிய அளவிலான குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ. 3500 வழங்க வேண்டும்.
அங்கன்வாடி முதன்மை மையங்களில் ஏற்படும் காலியிடங்களை குறுமையங்களின் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். குறுமையங்களில் தனி ஆளாக இருந்து பணியாற்றுவதால் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.
இவை உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைப்பதற்காக தமிழ்நாடு அரசு சத்துணவுப் பணியாளர் சங்கம், அங்கன்வாடி பணியாளர் சங்கம், மகளிர் ஊர்நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் சங்கம், ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளர் சங்கம், ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளர் சங்கம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் சார்பில் வரும் ஜன. 27ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், தொடர்ந்து பிப். 8ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பாலசுப்பிரமணியன்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.