பள்ளி கல்வித் துறையின், ஆறாவது அமைச்சராக நியமிக்கப்பட்ட வீரமணி, நியமனம் ஆன நாள் முதல் ஒரு மாதமாக ஏற்காடு இடைத்தேர்தல் பணியில் இருந்தார். ஒரு வழியாக நேற்று தேர்தல் முடிந்ததை அடுத்து, கல்வித்துறை சார்பில் சென்னையில் இன்று நடக்கும் விழாவில் முதன்முறையாக பங்கேற்கிறார். இதனால், அதிகாரிகள், பரபரப்பாக செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
அக்., 30ம் தேதி நடந்த அமைச்சரவை மாற்றத்தில், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த வீரமணி, பள்ளி கல்வி அமைச்சராக மாற்றப்பட்டார். துறையை பற்றி அமைச்சருக்கு விளக்க, அதிகாரிகள் தயாரான நேரத்தில், ஏற்காடு இடைத்தேர்தல் பணி வந்துவிட்டது. இதனால் அமைச்சர், ஏற்காட்டிலேயே இருந்ததால் எந்த விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. அதிகாரிகள் உடனான, ஆய்வு கூட்டமும் நடக்கவில்லை.
இந்நிலையில் தேர்தல் முடிந்ததை அடுத்து, முதன்முறையாக, பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னை, தாம்பரம், ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில், இன்று முதல் மூன்று நாட்கள் நேரு தேசிய அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நடக்கிறது. இதை, அமைச்சர் வீரமணி, துவக்கி வைக்கிறார்.
துறையின் புதிய அமைச்சராக பதவியேற்று, ஒரு மாதம் கழித்து, முதன் முறையாக, துறை சார்பில் நடக்கும் விழாவில், அவர் பங்கேற்க வருவதால், வரவேற்பு ஏற்பாடுகளை, துறை அதிகாரிகள், தடபுடலாக செய்துள்ளனர்.
கடந்த பொதுத் தேர்வில், தொடர்ச்சியாக பல குளறுபடிகள் நடந்தன. கேள்வித்தாளில், வங்கி படிவம் இணைப்பு, "மிஸ்சிங்"; விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், விடைத்தாள் கட்டுகள் மாயம்; கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், ரயிலில் இருந்து விடைத்தாள் கட்டுகள் விழுந்து சேதம்; கேள்விகளில் குளறுபடி என பெரும் சர்ச்சை ஏற்பட்டது. வரும் பொதுத் தேர்வை எந்த பிரச்னையும் இன்றி, சுமூகமாக நடத்துவதும், வேலூர் மாவட்டம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கல்வி தரத்தை உயர்த்துவதும், அமைச்சருக்கு சவாலாக இருக்கும்.
1 comment:
tet ?
Post a Comment