ஈரோடு மாவட்டம், பர்கூர் அடுத்த, வேலம்பட்டி அருகே பள்ளி இல்லாததால், அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர், கர்நாடக மாநிலம் நெல்லூரில் தமிழ் பயின்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், தட்டக்கரை அடுத்து, நான்கு புறமும், மலைகள் சூழ்ந்து, ரம்மியமாக, அமைதியாக உள்ளது வேலம்பட்டி மலைக்கிராமம். பல தலைமுறைகளாக இங்கு, 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்களின் முதன்மை தொழில் விவசாயமாகும். தாங்கள் படிக்காவிட்டாலும், தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதை, முக்கிய நோக்கமாக கொண்டுள்ளனர்.
தமிழக - கர்நாடக எல்லையான கற்கேகண்டி அருகே வசிப்பதால், அரசின் நேரடி பார்வை இன்றி, தினமும் பல பிரச்னைகளை, இம்மக்கள் சந்திக்கின்றனர்.
இதுபற்றி வேலம்பட்டி கிராம மக்கள் கூறியதாவது:
பர்கூரில் இருந்து கற்கேகண்டிக்கு செல்லும் வழியில், பல கி.மீட்டர் தொலைவில், நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு, வேலம்பட்டி அமைந்துள்ளது. பல தலைமுறைகளாக இங்கு வசிக்கிறோம். இப்பகுதியில் மின்சாரம், குடிநீர், சாலை வசதி இல்லை.
மலைப்பகுதி, வனப்பகுதியில் திரியும் எங்களுக்கு, போதிய கல்வியறிவு இல்லை. எங்கள் சந்ததியாவது படிக்க வேண்டுமென்ற எண்ணம் எங்கள் மக்களிடம் உள்ளது.
ஆனால், தமிழகம் - கர்நாடக எல்லைக்கு அருகே உள்ளதால், அரசின் நேரடிபார்வை இன்றி, இங்குள்ள மாணவ, மாணவியர் கல்வியறிவுக்காக ஏங்கி வருகின்றனர்.
தட்டக்கரையில் அரசுப்பள்ளி அமைந்துள்ளது. போதிய பஸ் வசதியின்றி, ஊசிமலை, பர்கூர் பகுதி மாணவ, மாணவியர், 8 கி.மீட்டர் வரை நடந்து செல்கின்றனர்.
கர்நாடகா மாநிலம் நெல்லூரில் உள்ள பள்ளியில், எங்கள் குழந்தைகள் படிக்க வைக்கிறோம். கர்நாடகா பள்ளி என்றாலும், மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
கர்நாடகாவில் படிப்பதால், தமிழ் மாணவர்களின் கல்வித்திறன் குன்ற வாய்ப்புள்ளது. எனவே, தாமரைக்கரை, வேலம்பட்டி அருகிலேயே, பள்ளியை நிறுவினால், ஊசிமலை, தட்டக்கரை, தாமரைக்கரை உள்ளிட்ட, பல கிராம மாணவர்கள் கல்வியறிவை அடைவர், என்றனர்.
No comments:
Post a Comment