நாமக்கல் மாவட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணிக்குள் பிரச்னை இருந்து வருவதால், அவர்களை ஒருங்கிணைப்பு செய்ய முடியாமல், மாவட்ட கல்வி அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பணியில் இருப்பவர்கள், தங்களது பணிவரன், சம்பளம், நிலுவைத் தொகை, பணப்பயன் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள சங்கம், கூட்டணி, அமைப்புகள் ஏற்படுத்தி, சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் பேசி, சுமூக தீர்வு ஏற்படுத்திக் கொள்வர்.
அந்தவகையில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், துவக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி, பட்டப்படிப்பு முடித்த, இளநிலை படிப்பு முடித்த என்பது உள்ளிட்ட பல பிரிவுகளில், ஆசிரியர்கள், சங்கங்கள் அமைத்து, தங்களது கோரிக்கை தொடர்பாக, அரசிடம் அல்லது கல்வி அதிகாரிகளிடம் பேசி தீர்த்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கென, ஏழு சங்கங்கள் உள்ளன. அவற்றில் பணியாற்றும் நிர்வாகிகளுக்குள், கருத்து வேறுபாடு அடிக்கடி ஏற்படுவதால், மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். அதனால், பள்ளி மாணவரின் கல்வி அல்லது மாவட்ட கல்வி அதிகாரிகளின் ஆலோசனைகள் பெறுவதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேந்தமங்கலம் அடுத்த நடுக்கோம்பை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன், கடந்த, செப்டம்பர், 18ம் தேதி இரவு, நெஞ்சுவலியால் உயிரிழந்தார். அதையடுத்து, சேந்தமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட, 44 துவக்க, நடுநிலை, உதவிபெறும் பள்ளிகள், 19ம் தேதி விடுமுறை விடப்பட்டது.
அந்த விடுமுறையை ஈடுகட்ட, செப்டம்பர், 26ம் தேதி, சேந்தமங்கலம் வட்டார வளமைய அலுவலகத்தில், 42 தலைமை ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு, செப்டம்பர், 28ம் தேதி, பள்ளிகளையைத் திறக்க, கண்காணிப்பாளர் ஜெயபால், தலைமை ஆசிரியர்களிடம் கையெழுத்து பெற்றுச் சென்றார்.
ஆனால், சில பள்ளிகள் திறக்காததால், பெற்றோர், மாணவர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. அதேபோல், நவம்பர், 2ம் தேதிக்கு (தீபாவளி விடுமுறை) முன்னதாக அல்லது அடுத்த நாள், கூடுதல் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு, சில அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
உள்ளூர் விடுமுறை விடுவதற்கு தலைமையாசிரியருக்கு அதிகாரம் இருந்தாலும், ஆசிரியர் அமைப்புகள் அதனை பேசி தீர்த்துக் கொள்வதில்லை. ஒரு குறிப்பிட்ட சங்கம், ஒரு கோரிக்கை தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் பேசி தீர்வு கண்டால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு கூட்டணி அமைப்பு அறிக்கை விடுகின்றனர்.
அதனால், கூட்டணி அமைப்பு நடவடிக்கையில் ஈடுபடாத துவக்கப்பள்ளி ஆசிரியர், மாணவர், மாவட்ட கல்வி அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெயர் வெளியிட விரும்பாத கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
துவக்கப்பள்ளிகளில், ஆசிரியரின் எண்ணிக்கை அதிகம். அதனால், பல ஆசிரியர் கூட்டணிகள், தனித்தனிக் குழுவாக செயல்பட்டு வருகின்றன. சிறிய அளவிலான நிர்வாக ரீதியான பிரச்னை என்றாலும், அமைப்புகள் மூலம், மாநில உயர் கல்வி அதிகாரிகள் வரை பேசி, அவர்களுக்கு சாதகமாக, காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர்.
அதனால், அவர்களை ஒருங்கிணைத்து, எங்களால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. மாவட்டத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளோடு, சமூக உறவை வைத்துள்ளனர்.
ஆசிரியர் பணியில் இருப்பவர்கள், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதே, சமூகத்தின் எதிர்பார்ப்பு. அதை அவர்கள் செயல்படுத்த, பொறுப்புடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment