"தற்போது மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது" என உதவி தொடக்க கல்வி அதிகாரி சார்லஸ் இன்பராஜ் கூறினார்.
வேட்டைக்காரன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மாவட்ட நூலக அலுவலர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, 46 வது தேசிய நூலக வார விழாவினையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் சுப்பேகவுண்டன் புதூர் அரசு நடுநிலை பள்ளி, வேட்டைக்காரன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, பாரஸ்ட் ஹில் அகடாமி பள்ளி, மகாத்மா காந்தி வித்யா மந்திர் பள்ளி, உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஒவியம், ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன.
அவற்றில் 50க்கு அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நேற்று ஆனைமலை லயன்ஸ் சங்கமும், வேட்டைக்காரன் புதூர் கிளை நூலகத்தின் வாசகர் வட்டமும் இணைந்து பரிசுகளை வழங்கியது. வாசகர் வட்ட தலைவர் அசோக் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார்.
உதவி தொடக்க கல்வி அதிகாரி சார்லஸ் இன்பராஜ் பேசியதாவது: தற்போது மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது. நூல்கள், செய்தித்தாள்களின் இடத்தை "டிவி" பிடித்து விட்டது. முன்பு விடுமுறை நாட்களில் காமிக்ஸ், சிறுவர் கதை புத்தகங்கள், குழந்தைகளுக்கு படிக்க தரப்பட்டன. இதனால் குழந்தைகள் சரியான வார்த்தை உச்சரிப்பும், எழுத்து பிழையின்றி எழுதும் திறன் பெற்றிருந்தனர்.
தற்போது வாசிப்புத்திறனை அதிகரிப்பது அவசியமான ஒன்றாகும். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளில் நடத்தப்படும் பாடத்தில் உள்ள பல விஷயங்கள் "சிறுவர் மலர்" புத்தகத்தில் உள்ளது. நீதி கதைகள் படிக்கும் குழந்தைகளிடம் தீய எண்ணங்கள் தோன்றுவது கிடையாது. புதுமையான கருத்துகளை தருவது நூலகம் மட்டுமே ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment