தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு அடிப்படை கல்வி போதிப்பதில் சிக்கல் நிலவுகிறது. துவக்கப்பள்ளிகளில் அடிப்படை கல்வி சிறப்பாக அமைந்தால், குழந்தைகளின் உயர் கல்வி மேலோங்கும். அடிப்படைக்கல்வி வலுவிழந்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
பள்ளி வயது குழந்தைகளுக்கு துவக்கக்கல்வி வழங்க கோடிக்கணக்கில் நிதி, பாடப்புத்தங்கள், மதிய உணவு, காலணிகள், சீருடைகள் உள்ளிட்டவற்றை, அரசு இலவசமாக வழங்குகிறது.
ஆனால், மாணவர்களின் விகிதாச்சாரத்திற்கேற்ப, ஆசிரியர்களை நியமிப்பதில் அலட்சியம் காட்டப்படுகிறது. ஒன்று முதல் 5ம் வகுப்பில் வரை, ஒரு வகுப்பில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், ஆறு முதல் எட்டாவது வரை ஒரு வகுப்பிற்கு 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரு வகுப்பிற்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற கணக்கில் பாடம் கற்பிக்க வேண்டுமென்பது பள்ளி கல்வித்துறை விதி.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு சார்பில் 934 துவக்கப்பள்ளிகள், 210 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 635 பள்ளிகள் இரண்டு
ஆசிரியர் பள்ளிகள். 62 ஆயிரத்து 958 மாணவிகள் உள்பட ஒரு லட்சத்து 29ஆயிரத்து 986 பேர் துவக்கப் பள்ளிகளில் படிக்கின்றனர். 32 ஆயிரத்து 625 மாணவிகள் உள்பட 67 ஆயிரத்து 818 பேர் நடுநிலைப்பள்ளியில் படிக்கின்றனர். துவக்கப்பள்ளிகளில் 3600 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 24 பட்டதாரி ஆசிரியர், 70 இடை நிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இரண்டாம் பருவத்தேர்வு துவங்க உள்ளநிலையில் காலி பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. இதனால் துவக்கப்பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மண்டபம் வட்டார பொதுக்குழு உறுப்பினர் கோமகன் கூறுகையில், ""ஆரம்பக்கல்வி தான், மாணவர்களின் ஆணிவேர். ஆரம்பப்பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால், மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கும். பிற ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். தொடக்கக்கல்வித்துறை அ<லுவலர் ஒருவர் கூறும்போது: மாவட்டத்தில் ஓராசிரியர் பள்ளிகள் இல்லை. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்தோர், அடுத்தாண்டு துவக்கத்தில் காலி பணியிடங்களில் நியமிக்கப்படுவர், என்றார்.
No comments:
Post a Comment