"நெல்லை பல்கலையின் எம்.ஏ., தமிழ் கேள்வித்தாள் தரம் குறைந்துள்ளது, என்ற சர்ச்சை குறித்து யாரும் புகார் கூறவில்லை" என தேர்வாணையர் கண்ணன் பதிலளித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கல்லூரிகளில் எம்.ஏ.,தமிழ், முதலாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் கடந்த நவம்பரில் நடந்தன. "இக்கால இலக்கியம், கவிதையும் நாடகமும்" என்ற பாட கேள்வித்தாளில், ஒரு மதிப்பெண் பகுதியில் 10 கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விக்கு நான்கு பதில்கள் இருக்கும். அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
இதில் "குயில்பாட்டு" எழுதியவர் யார் என்ற கேள்விக்கு பாரதியார் உள்ளிட்ட நால்வரின் பெயரை குறிப்பிட்டு தேர்வு செய்யுமாறு எளிமையாக கேள்வி கேட்கப்பட்டுள்ளதாகவும், எம்.ஏ., தமிழ், தேர்வுக்கு மூன்றாம் வகுப்பு தேர்வு போல எளிமையாக கேட்கப்பட்டதாகவும் சர்ச்சை ஏற்பட்டது.
இதுதொடர்பாக நெல்லை பல்கலை தேர்வாணையர் கண்ணன் கூறியதாவது: நெல்லை பல்கலைக்கு உட்பட்ட மூன்று மாவட்ட கல்லூரிகளின் கேள்வித்தாள்களை பல்கலை பேராசிரியர்கள் தயாரிப்பதில்லை. இதற்காக கல்லூரி பேராசிரியர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வேறு ஒரு பல்கலை பேராசிரியர்தான் அந்த கேள்வித்தாளை தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் ஐந்து கேள்வித்தாள் வங்கியில் இருந்து, ஒரு கேள்வித்தாளை, இங்குள்ள பேராசிரியர்களில் சீனியர் தேர்ந்தெடுக்கிறார்.
மேலும் கேள்விகள், பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டுள்ளன. வெளியே இருந்து கேட்கப்படவில்லை. மேலும் இதுகுறித்து மாணவர்களோ, பேராசிரியரோ யாரும் புகார் செய்யவில்லை. தேர்வு நடந்தது கடந்த நவம்பர் 11ம் தேதி. எனவே ஒரு மாதத்திற்கு பிறகு, பல்கலையின் செனட் கூட்டம் நடக்கும் தினத்தில், ஏதோ குறை நடந்தது போல இத்தகைய செய்திகள் வெளியாவதின் உள்நோக்கம் தெரியவில்லை, என்றார்.
இதுகுறித்து பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் அ.ராமசாமி கூறுகையில், "எம்.ஏ.,தமிழ் பாடத்தின் கேள்வித்தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் மேம்போக்காக இருந்தது. பல்கலை பேராசிரியர்களை கல்லூரி மாணவர்களுக்கான கேள்வித்தாள் தயாரிக்க அனுமதிப்பதில்லை. உயர்கல்வி மாணவர்களுக்கு அவர்களுக்கு உரிய தகுதியை சோதிக்கும் வகையில் கேள்விகள் அமைய வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment