ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரே கேள்வி எண்ணில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி கேள்விகள் வேறுபட்டு இருப்பதுடன், இதற்கான பதில்களும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது புதிய புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதி நடந்தது. இதில் 6.60 லட்சம் பேர் பங்கேற்றனர். டி.இ.டி., தேர்வு முடிவு நவ., 5 ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில், 4.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். சரியான பல பதில்களுக்கு மதிப்பெண் தரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புகார்கள் குவிந்தன.
இந்நிலையில் தற்போது இரண்டாம் தாள் சமூக அறிவியல் தேர்வில்கேள்வித்தாளில் தமிழ் வழியில் ஒரு மாதிரியாகவும், ஆங்கில வழியில் ஒரு மாதிரியாகவும், கேள்வியே தவறாக கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட கோவை தேர்வர் விஜயலட்சுமி கூறுகையில், "டி.இ.டி., இரண்டாம் தாள் சமூக அறிவியல் தேர்வில், "பி" வரிசை கேள்வித்தாளில் 113 வது கேள்வியில் "மனிதன் மண்வளத்தை பாதுகாக்க எடுக்கும் முயற்சி" என்று கேட்கப்பட்டுள்ளது. அதே கேள்வி ஆங்கில வழியில், "மண் அரிமானத்தை தடுக்க மனிதன் மேற்கொள்ள வேண்டிய முயற்சி" என்று கேட்கப்பட்டுள்ளது. மண்வள பாதுகாப்பு என்பதை மண் அரிமானத்துடன் ஒப்பிட இயலாது, இரண்டும் வேறு அர்த்தங்களை கொண்டுள்ளது.
மேலும், இக்கேள்விக்கான பதில், "ஆப்சன் பி" "வேளாண்மை செய்தல்" என்பதற்கு பதிலாக "ஆப்சன் டி" "தாவரங்களை வளர்த்தல்" என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தவறாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சரியான பதில் நான்கு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்தும் தெளிவாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பினோம்.
மேலும் நேரடியாக சென்று அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்தோம். இருந்தும், ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. தற்போது, 89 மதிப்பெண் பெற்றுள்ளேன். ஒரு மதிப்பெண்ணில் என் வாழ்க்கை பாதித்துள்ளது. என்னை போன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
No comments:
Post a Comment