செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, விண்ணில் செலுத்தப்பட்ட "மங்கள்யான்" செயற்கைக்கோள், புவிவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை துவக்கியது.
செவ்வாய் கிரகத்தை ஆராய, "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்" திட்டத்தின் கீழ், 450 கோடி ரூபாய் மதிப்பில் "மங்கள்யான்" செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. "இஸ்ரோ" சார்பில், "மங்கள்யான்" செயற்கைக்கோள், நவம்பர் 5ம் தேதி பி.எஸ்.எல்.வி., சி - 25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, "மங்கள்யான்" செயற்கைக்கோளின் நீள்வட்ட பாதையை, பல கட்டங்களாக அதிகரிக்கும் பணி, பெங்களூருவில் உள்ள, "பீன்யா" கட்டுப்பாட்டு மையத்தில் நடந்தது.
கடைசியாக, நவ., 16ம் தேதி பூமியில் இருந்து 1,92,874 கி.மீ., உயரத்தில், "மங்கள்யான்" செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து, "மங்கள்யான்" செயற்கைக்கோளை விடுவிக்க, அதன் வேகத்தை அதிகரிக்கும் பணியில், "இஸ்ரோ" விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இன்று அதிகாலை, 12:30 மணிக்கு, "மங்கள்யான்" செயற்கைக் கோள் செவ்வாய் கிரக பாதையை நோக்கி திருப்பப்பட்டது. தொடந்து 12.49 மணிக்கு மங்கள்யான் செயற்கைக்கோளை செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக, பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகம் நோக்கி தன், 68 கோடி கி.மீ., பயணத்தை துவக்கியது. "மங்கள்யான்" செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள, சிறிய வகை ராக்கெட்கள் இயக்கப்பட்டு, நொடிக்கு 647.96 மைல் வேகத்தில், செவ்வாய் கிரகத்தை நோக்கி, "மங்கள்யான்" பயணிக்கும்.
இந்த வேகத்தில் சென்றால் தான், பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து, விடுபட முடியும். இதே வேகத்தில், விண்வெளியில் பயணித்து, 2014, செப்., 24ம் தேதி, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை, "மங்கள்யான்" செயற்கைக்கோள் அடையும்.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட செவ்வாய் கிரக சாதனையை தற்போது இந்தியாவும் சாதித்துள்ளது. முன்னதாக, சீனா செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பிய விண்கலம், பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து வெளியேற முடியாமல் தோல்வியடைந்தது.
இதைத் தொடர்ந்து இந்தியாவின் செவ்வாய் ஆராய்ச்சியை சீனா உள்ளிட்ட நாடுகள் கூர்மையாக கவனித்து வந்தன. இந்நிலையில், மங்கள்யானின் இந்த வெற்றி, விண்வெளி துறையின் இந்தியாவின் முத்திரையை அழுத்தமாக பதித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.