அனைத்து கோப்புகளையும் தமிழில் எழுதிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு ஆட்சிமொழி கருத்தரங்கில் கலெக்டர் சண்முகம் கேடயத்தை வழங்கினார்.
கருத்தரங்கம்
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி கூட்டரங்கில் ஆட்சி மொழி கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கி தமிழில் அனைத்து கோப்புகளை எழுதிய சிறந்த மாவட்ட நிலை அலுவலகத்துக்கு கேடயத்தையும், தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய அரசு பணியாளர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழில் பேச வேண்டும்
ஐ.நா. சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ என்ற தமிழ் வாசகம் உள்ளது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற கருத்தினை உலகத்திற்கு உணர்த்தியது தமிழ்மொழி. நாம் தமிழ் மொழி மீது பற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மொழியை நேசிக்க வேண்டும். நம் அனைவருக்கும் தமிழ் மொழி சுவாசமாய் இருக்க வேண்டும். மொழி என்பது கருத்துப்பரிமாற்ற சாதனம் ஆகும். தமிழ் அறிந்த ஒருவனிடம் தமிழில் தான் பேச வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சண்முகம் கூறினார்.
இதில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் கா.மு.சேகர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வளர்ச்சி
அரசுப்பணியாளர்கள் அனைவரும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என 1978-ம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. நம்முடைய அடிப்படை கடமை கையெழுத்தை தமிழில் போட வேண்டும். நிர்வாக மொழி, ஆளுகின்ற மொழி, படிக்கின்ற மொழி, பேசுகின்ற மொழி என அனைத்திலும் தமிழைப் பயன்படுத்த வேண்டும்.
எந்த நாட்டில் தாய்மொழி மதிக்கப்படுகின்றதோ அந்நாடு வளர்ச்சி பெறுகிறது. கோப்புகள் என்பது ஒரு ஆவணம். அதனை தமிழில் சிறப்பாக எழுதினால் அது பிற்காலத்தில் ஒரு வரலாறாக அமையும். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும். தமிழில் பெயர் சூட்டி கூப்பிட்டால் அவர்களின் ஆயுள் கூடும். ஆவணங்கள் அனைத்தும் தமிழில் எழுதினால்தான் வரலாறு பேசும்.
இவ்வாறு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் கா.மு.சேகர் கூறினார்.
பரிசு-சான்றிதழ்
கருத்தரங்கில் தமிழில் அனைத்து கோப்புகளையும் எழுதிய சிறந்த மாவட்ட நிலை அலுவலகத்துக்கான கேடயம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு வழங்கப்பட்டது. இதேபோல் தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதியதற்காக சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக இளநிலை உதவியாளர் செ.ரவி, ஊராட்சிகள் அலுவலகத்தை சேர்ந்த உதவியாளர் ஆர்.தேவகி, காஞ்சிக்கோவில் பேரூராட்சி அலுவலக வரிவசூலர் பெ.குருமணி கதிரேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக இளநிலை உதவியாளர் மா.ஜெகநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
2 நாட்கள்
2 நாட்கள் நடந்த இந்த கருத்தரங்கத்தில் ஆட்சி மொழி திட்ட செயலாக்கம், ஆட்சிமொழி சட்டம், வரலாறு, மொழிபெயர்ப்பு, அரசாணைகள், அலுவலகக்குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள், மொழிப்பயிற்சி, ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் புலவர் ஆறுமுகம், தமிழ் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ப.அன்புச்செழியன் வரவேற்று பேசினார். முடிவில், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜெ.சவுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment