Pages

Friday, November 22, 2013

3,625 ஆசிரியர்கள் பணிமூப்பு பட்டியல் தயார்: பதவி உயர்வு அறிவிக்காதது ஏன்?

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 3625 பேரின் பணிமூப்பு பட்டியல் தயார் நிலையில் இருந்தும் பல மாதங்களாக பதவி உயர்வு அறிவிக்கப்படாத மர்மம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

மாநில அளவில், 525 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர், 1100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலை, 1.1.2013ல் பள்ளிக் கல்வித்துறை தயாரித்தது. உயர்நிலை பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பாக, பட்டதாரி மற்றும் தமிழாசிரியருக்கு இடையே நிலவும் சில பிரச்னையால், கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆனால், முதுநிலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு அளிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை. கடந்த மே மாதம் அறிவிக்க வேண்டிய இந்த பதவி உயர்வு, "என்ன காரணத்தால்" இதுவரை வெளியிடவில்லை என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். இதில், பலர் ஓய்வு பெறும் நிலையை எட்டியுள்ளனர். இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சங்க பொதுச் செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:

பத்தாம் வகுப்பு தேர்வு நெருங்குகிறது. ஆனால், 525 உயர்நிலை பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் இல்லை. ஆசிரியர்களுக்குள் நிலவும் பிரச்னையை அதிகாரிகள் எளிதாக பேசி முடிவு எட்டலாம். அதேபோல், 2013ம் ஆண்டிற்கான, முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வு "பேனல்" தயார் நிலையில் இருந்தும், பதவி உயர்வு அறிவிப்பு இல்லை. இதனால், பலர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 2014ம் ஆண்டிற்கான ஆசிரியர் பணிமூப்பு பட்டியல் தயாரிக்கும் பணியும் துவங்கிவிட்டது. மாணவர்கள் நலன், கல்வி முன்னேற்றம், தேர்ச்சி விகிதம் பாதிக்காமல் இருக்க கல்வித்துறை அதிகாரிகள் இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும், என்றார்.

"பேனலில்" உள்ள ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பள்ளிக்கல்வித் துறையில் அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றனர். பதவி உயர்வு பிரச்னை குறித்து ஒரு அமைச்சரிடம் முழு விவரத்தையும் விளக்கிய ஒரு சில நாட்களில், அந்த அமைச்சர் வேறு துறைக்கு திடீரென மாற்றப்படுகிறார். அதேபோல், தேவராஜன் இயக்குனராக இருந்த போது, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்போன நிலையில் அவரும் மாற்றப்பட்டார். பலமுறை நேரடியாக சென்று, கல்வித்துறை செயலாளரிடம் விவரம் தெரிவித்தும் முன்னேற்றம் இல்லை, என்றனர்.

1 comment:

  1. sirs,
    Double degree case is in the Chennai Court.So that the BT promotion also delayed.Don't u know.Promotions&postings will subject to the final judgement of the writ petition.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.