"ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனு: ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைப்படி, "ஆசிரியர் தகுதி தேர்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தகுதி மதிப்பெண்ணில், 5 சதவீதம் தளர்த்தலாம்" என, கூறப்பட்டுள்ளது. 11 மாநிலங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தகுதி மதிப்பெண் தளர்த்தப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில், பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், தளர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும், தகுதி மதிப்பெண் தளர்த்தக் கோரி, தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த, மே மாதம், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, தகுதி மதிப்பெண்ணை தளர்த்தினால், புதிய தேர்வு தேவையில்லை. எனவே, புதிய தகுதி தேர்வு தொடர்பான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, கருப்பையா, வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோரும், மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.
இறுதி விசாரணையை, நவ., 18ம் தேதிக்கு தள்ளி வைத்து, "ஆசிரியர் தேர்வு மற்றும் நியமனங்கள், இவ்வழக்கின் மீதான இறுதி முடிவைப் பொறுத்து அமையும்" என,"முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.