சேலத்தில் கல்வித் துறை அதிகாரிகளைக் கண்டித்து ஆசிரியர்கள் சங்கத்தினர், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை இந்த அலுவலகத்துக்கு வந்த தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திகேயன், பொதுச் செயலர் கிப்சன், மாநிலப் பொருளாளர் முனியசாமி, மாவட்டச் செயலர் ராம்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது:
சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நர்சரி - பிரைமரி பள்ளி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சிலர் மீது பல்வேறு லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர்களால் ஆசிரியர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல முறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், இவர்களது முறைகேடுகள் தொடர்பாக, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்டு விண்ணப்பித்ததற்காக ஆசிரியரும், மாவட்டச் செயலருமான ராம்குமார் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, அதிகார மட்டத்தில் உள்ள தவறானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமைதியான முறையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். இதைத் தொடர்ந்து, முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment