Pages

Tuesday, October 29, 2013

தமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததாலும், சிறப்புக் கட்டணம் வழங்கப்படாததாலும் அப்பள்ளிகளின் வளர்ச்சிகள் பாதிக்கப்பட்டு நசுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களின் அதிகமான தேர்ச்சி விழுக்காடே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டம்: கடந்த 2009-ம் ஆண்டு முதல் மத்தியஅரசால் குழந்தைகளுக்கான இலவச மற்றும்  கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம்-2009 நடைமுறைபடுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் 2010 ஏப்ரல் முசல் நாளிலிருந்து நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய அம்சமாக 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்கக்கல்வி முடிக்கும் வரையில் அருகாமையில் உள்ள பள்ளிகளில் இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி அளித்த வேண்டும் என்பதே ஆகும். பள்ளியில் சேர்க்கப்படாமலோ அல்லது படிப்பை இடையில் நிறுத்தியிருந்தாலோ அக்குழந்தைக்குரிய வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும். உதாரணமாக பள்ளிக்கு செல்லாத ஒரு குழந்தை தனது 12 வயதில் பள்ளிக்கு வந்து தன்னை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டால் தலைமைஆசிரியர் அக்குழந்தையை 7-ம் வகுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும். அக்குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றாலும், அவன் சொல்லும் பிறந்த தேதியை ஏற்றுக்கொண்டு, சேர்க்கை அளிக்க வேண்டும்.

4 ஆண்டுகளாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்: ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது அடிப்படை கல்வித்தகுதியை பெற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவராத இருக்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் அரசு பள்ளிக்கு தேவையான பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் இதுவரை 50 சதவீதம் கூட தேர்ச்சி பெறவில்லை. அவ்வாறு தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில்தான் பணியில் சேருகிறார்கள். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் காலிப் பணியிடம் முழுவதும் நிரப்பப்பட்டு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உபரியாக இருக்கும் பட்சத்தில்தான் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் 4 ஆண்டுகளாக அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் நிரப்பப்படாமல் காலிப் பணியிடங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது.

தொகுப்பூதிய ஆதசிரியர் நியமனம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது: தமிழகஅரசு தற்காலிகமாக தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களை ரூ.5 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே நிரப்பிக் கொள்ளலாம் என சில நாட்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடியாத நிலையில், பள்ளிகளில் காலிப் பணியிடங்களாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களான (Non Teaching) இளநிலை உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட எந்த பணியிடங்களையும் கடந்த 4 ஆண்டுகளாக நிரப்புவதற்கு அரசு அனுமதி தர முன்வரவில்லை.

2 ஆண்டுகளாக சிறப்பு கட்டணம் வழங்கப்படவில்லை: அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து வேறு எந்த கட்டணமும் பெறப்படாத நிலையில் சிறப்பு கட்டணம் மட்டும் (6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு ரூ.32, 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.47, 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.103) பெறப்பட்டு பள்ளியில் சில்லரை செலவினங்களை செய்து வந்தனர். இந்த கட்டணத்தையும் மாணவர்களிடம் வசூல் செய்ய வேண்டாம் என்றும், அரசே இந்த கட்டணத்தை பள்ளிக்கு வழங்கும் என முந்தையஅரசு அறிவித்து கொடுத்து வந்தது. ஆனால் இந்த கட்டணம் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாததால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு தேவையான சில்லரை செலவினங்களை தங்களது பணத்தை கொண்டு செலவு செய்துவிட்டு சிறப்புக்கட்டணத்தை எதிர்பார்த்து கொண்டு உள்ளனர்.

எனவே அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யவும், 2 ஆண்டுகளாக வழங்கப்படாத சிறப்பு கட்டணத்தையும் வழங்கவும் தமிழக அரசு கல்வித்துறை நடவடிக்கை எடுக்காவிடில் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்தி காட்டி அரசு பெருமை சேர்த்து வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்படும்.

1 comment:

  1. குமரன்Tuesday, October 29, 2013

    அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தலாம்.
    ஏனெனில்,
    # அரசு உதவி பெறும் பள்ளி நிவாகிகளால் அப்பள்ளி ஆசிரியர்கள் படும் மனம் மற்றும் பண ரீதியான தொந்தொரவுகளைத் தாண்டியே அவர்கள் கற்றல் கற்பித்தலில் ஈடுபட வேண்டியுள்ளது.......அது சாத்தியமானதா.......?

    # மேலும் ஒரு இடைநிலை ஆசிரியர் பணிக்கே ரூ.11 இலட்சம் வரை என சமீபத்தில் அப்பள்ளி நிர்வாகியால் வசூல் செய்யப்படுகிறது.இவ்வளவு பணம் தந்து வேலைக்கு வரும் ஆசிரியர் ஒழுங்காக வேலை பார்ப்பாரா.........?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.