Pages

Monday, October 14, 2013

"பகிர்தலில் இன்பம்" சம்பிரதாயம் அல்ல: ஆரம்பப்பள்ளி மாணவர்களின் "ஈகை"

ரத்த அணுக்கள் குறைவால் சிகிச்சை பெறும் சக மாணவருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளனர், காரைக்குடி முத்துப்பட்டணம் நகராட்சி ஆரம்பப்பள்ளி மாணவர்கள்.

ஈகை மற்றும் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் மனப்போக்கை மாணவர்களிடையே உருவாக்கும் வகையில், அக்., 2 முதல் 8 ம் தேதி வரை, பள்ளிகளில் "பகிர்தலில் இன்பம் வாரம்" கொண்டாடப்பட்டது. வழக்கமாக, இதுபோன்ற உத்தரவுகள், பள்ளிகளில் சம்பிரதாயமான நிகழ்வாகவே இருக்கும். ஆனால், "நாங்கள் இளகிய மனம் கொண்டவர்கள். உதவும் குணத்துக்கா பஞ்சம்" என முன்னுதாரணமாக திகழ்கின்றனர், காரைக்குடி முத்துப்பட்டணம் நகராட்சி ஆரம்பப் பள்ளி மாணவர்கள்.

இங்கு, நான்காம் வகுப்பு படிக்கும் விக்ரம், 9, இரண்டு மாதமாக, ரத்த அணுக்கள் பற்றாக்குறையால், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவனது தந்தை, சுப்பிரமணியன், எலக்ட்ரீஷியனாக உள்ளார். விக்ரமின் சிகிச்சைக்காக, இப்பள்ளியில் 340 மாணவர்கள், 15 ஆசிரியர்கள் சார்பில், 30 ஆயிரம் ரூபாய் உதவி வழங்கினர்.

இதுகுறித்து, தலைமை ஆசிரியர் ஹேமலதா கூறியதாவது: "பகிர்தலில் இன்பம் வாரம்" கொண்டாட தீர்மானித்தபோது, விக்ரம் அவதிப்படுவது குறித்து, சக மாணவர்கள் கூறினர். அவனுக்கு உதவ நினைத்து, அனைத்து மாணவர்களிடமும் கூறினோம். மாணவர்கள், 100 முதல் 2,000 ரூபாய் வரை, வழங்க முன் வந்தனர்; ஆசிரியர்களும், உதவி செய்தனர். மொத்தம், 30 ஆயிரம் ரூபாய் வசூலானது.

இதை, விக்ரமின் தாய் லட்சுமியிடம், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஜெயக்குமார், மூர்த்தி முன்னிலையில் மாணவர்களே வழங்கினர். தொடர்ந்து அந்த மாணவருக்கு மருத்துவ உதவி கேட்டு, பல்வேறு அமைப்புகளுக்கு, மாணவர்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவ்வாறு கூறினார்.

அந்த மாணவருக்கு உதவ, 77089 57181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.