மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வரும், மாற்றுத் திறனாளிகளுக்கான இடைநிலை கல்வித்திட்டத்தில், பணியாற்றும் சிறப்பாசிரியர்கள், மூன்று ஆண்டுகளாக சம்பளம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென, மத்திய அரசு நிதியுதவியுடன், &'ஐ.இ.டி.எஸ்.எஸ்.,&' என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், பார்வைத்திறன் குறைவு மற்றும் கேட்கும் திறன் இழப்பு, மன வளர்ச்சி குறைவு உள்ளிட்ட, மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கல்விக்காக, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் துவக்கப்பட்டன.
கடந்த, 2009-10ல் துவக்கப்பட்ட இத்திட்டத்தில், பணியாற்றிய சிறப்பு ஆசிரியர்களுக்கு, அந்தக் கல்வி ஆண்டுக்கான ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பின், இன்று வரை, மூன்று ஆண்டுகளாக, சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், தமிழகம் முழுவதும், பணிபுரியும், 200க்கும் மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்கள், தவித்து வருகின்றனர்.
இது குறித்து, சிறப்பு ஆசிரியர்கள் கூறியதாவது: இத்திட்டத்தின் பணிபுரியும், 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு வழங்கும் சம்பளத்தையே, நம்பி உள்ளோம். இதில், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, குடும்பம் உள்ளது. மூன்று ஆண்டுகளாக சம்பளம் இல்லாததால், வறுமையில் வாடுகின்றனர். பலர் கடன் வாங்கி, குடும்ப தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். இதற்கு, அதிக வட்டி செலுத்த வேண்டி உள்ளது.
இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை. இனிமேலாவது, அரசு இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, சிறப்பாசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment