கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் தொங்கல் பயணம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காததால், விபத்துக்களும் தொடர்கதையாகி வருகிறது.
உடுமலை தாலுகாவில் 400க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. மேலும், நூற்பாலைகள், காற்றாலை நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில்கள் வளர்ந்து வரும் நகராக உள்ளது.
உடுமலை தாலுகாவில் ஆண்டிற்கு ஆண்டு மக்கள் தொகை பெருக்கமடைந்து வருகிறது. புதிது புதிதாக நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும் உருவாகி வருகின்றன. தொழில் வளர்ச்சி மட்டுமன்றி, மூணாறு, மறையூர், திருமூர்த்தி மலை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களும் உள்ளதால் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. இதற்காக, உடுமலை கிளை போக்குவரத்துக்கழகம் சார்பில், பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கிராமப்பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், பல கிராமங்களில் பல மணி நேரம் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டியதுள்ளது. பல மணி நேரத்திற்கு பின் வரும் பஸ்களிலும் அதிகளவு கூட்ட நெரிசலால், தொங்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய அவல நிலை உள்ளது.
குறிப்பாக, போக்குவரத்து அதிகரிக்கும் நேரமான (பீக் ஹவர்ஸ்) காலை 7.30 மணியில் இருந்து 10.00 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 7.00 மணி வரையிலும் பஸ்களில் மக்கள் நெரிசல் அதிகரித்து வருகிறது. தினமும் மக்கள் ஆபத்து பயணத்தில் அலைமோத வேண்டியதுள்ளது.
அதிலும், பள்ளிக்குழந்தைகள் படியில் தொங்கி வந்து பள்ளிகளில் படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால், விபத்துக்கள் தொடர்கதையாகியுள்ளது. தொங்கல் பயணத்தால் விபத்துக்கள் நடந்த போது மட்டும் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். ஆனால், அதன் பின் நடவடிக்கை எடுக்காததால், தொங்கல் பயணம் தொடர்கதையாகி வருகிறது.
"கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ் இயக்கப்படாததால், தொங்கல் பயணம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. இதனை தவிர்க்க நெரிசல் மிகுந்த நேரத்திலாவது கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை; தொங்கல் பயணத்தால் விபத்துக்கள் தான் ஏற்படுகிறது. கிராமப்புறங்களுக்கு இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.