இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்திற்காக பல சங்ககங்கள் குரல் கொடுக்க தொடங்கியிருப்பது அரசின் கவனத்தை ஈர்த்திருப்பதாக தெரியவில்லை. மாறாக கடுமையான போராட்டமே நமக்கான விடியலைத்தேடித் தரும். இந்த சூழ்நிலையில் முக நூலில் ஒவ்வொருத்தரும் தங்கள் சங்கம்தான் பெரியது என்பது போலவும், போராட்ட களம் காண்பதில் நாங்கள்தான வல்லவர்கள் என்று எழுத்து யுத்தம் ஆரம்பித்து இருப்பது ஆள்பவர்களுக்கு நமது ஒற்றுமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. ஒவ்வொரு இயக்கத்திற்கும் தனி கொள்கைகள் இருக்கலாம்.
மாஸ்டர் இராமுண்ணி அவர்களால் தொடங்கப்பட்டு ஒன்றுபட்ட இயக்கமாக நமது முன்னோர்கள் போராடி பெற்ற உரிமைகள் பல இன்று நம்மிடம் இல்லை. அந்த ஒன்றுபட்ட இயக்கம் பல கிளை இயக்கஙகளாக பிரிந்து விட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அந்த இயக்க வரலாற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் மற்ற இயக்க தோழர்கள் மனம் புண்படுமாறு இயக்க வரலாற்றை திரித்து பதிவுகள் வெளியிடுவது என்பது நம்மை நாமே எச்சில் உமிழ்ந்து கொள்வதற்கு சமம். ஒவ்வொருவரும் இப்படி கருத்து யுத்தம் நடத்தினால் மீண்டும் இடைநிலை ஆசிரியர்களை ஏமாற்ற நடக்கும் நாடகமாகவே இது முடியும். இடைநிலை ஆசிரியர்களை வைத்து சங்கம் நடத்துபவர்கள் அவர்களின் கோரிக்கைகளை மட்டும் கையிலெடுத்து போராடாமல் பொது கோரிக்கைகள் மத்தியில் வைத்து குரல் கொடுப்பது என்பது அந்த கோரிக்கையின் மதிப்பு அரசாங்கத்திற்கு புரியாது. இதில் நான் பெரியவன் என்ற காழ்ப்புணர்ச்சிகளை விட்டுவிட்டு ஆகஸ்ட் 18 அன்று இயக்கத்தலைவர்கள் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு வித்திட வேண்டும். இங்கு உறுப்பினர்கள் தீயாய் வேலை செய்ய தயாராய் இருக்கும் பொழுது சில தலைவர்கள் பழங்கதைகள் சொல்லி சொல்லி மேலும் முட்டாளாக்குவதை விடவேண்டும். அனைத்து இயக்கங்களின் உணர்வுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். நட்நதவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனிமேல் நடப்பவைகளை நன்றாக திட்டுமிட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் ஏற்படும் வரையிலும் போராட்ட களத்திலிருந்து எக்காரணம் கொண்டு பின் வாங்க மாட்டோம் என்ற உறுதியை அனைத்து தலைவர்களும் உறுதி ஏற்க வேண்டும். இதனை நண்பர்கள் தாங்கள் சார்ந்துள்ள இயக்க தலைமையை வலியுறுத்த வேண்டுகிறேன். கிட்டதட்ட ரூ.8000க்கு மேல் ஊதிய இழப்பினை திரும்ப பெறுவோம். இது அரசியல் இயக்கமல்ல. ஆசிரியர் இயக்கம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்தநல் லறிவு வேண்டும்; பண்ணிய பாவ மெல்லாம் பரிதிமுன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்!
தோழமையுடன்...
ஆ.முத்துப்பாண்டியன்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.