பொருளாதாரத்தில் பின்தங்கிய, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, பள்ளி மாணவர்களுக்கு, வினாக்கள் அடங்கிய, "சிறப்பு வழிகாட்டி" புத்தகம் தயாரிக்கும் பணியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஈடுபட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, 2.47 கோடி ரூபாய் செலவில், வினாக்கள் அடங்கிய, சிறப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு, கடந்த கல்வியாண்டில், அறிமுகப்படுத்தியது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களான, பெரம்பலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கடலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபு வகுப்பைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும், இத்திட்டத்தின் மூலம் பயன் அடைந்தனர். சிறப்பு வழிகாட்டியில், விளக்கக் கையேடும், ஏற்கனவே தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் இடம் பெற்றிருக்கும்.
இது குறித்து, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிறப்பு வழிகாட்டி புத்தகங்களை, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் அச்சிடும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்த உடன், மாணவர்களுக்கு வழங்கப்படும்" என்றார்.
No comments:
Post a Comment