Pages

Monday, August 19, 2013

அரசுப் பள்ளிகளுக்கு 36,600 மரக்கன்றுகள்: சுற்றுச் சூழல் மன்றம் ஏற்பாடு

சுற்றுச் சூழல் மன்றம் சார்பாக அரசு பள்ளிகளில், 36 ஆயிரத்து 600 மரக் கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது.


உலகம் முழுவதும் வனப் பகுதிகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதுடன், நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் புவி வெப்பமயமாதல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பனிப்பாறைகள் உருகி கடலின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளின் வானிலை பாதிக்கப்பட்டு அதிக வெப்பம் மற்றும் பருவ மழை மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து, உலகம் முழுவதும் மரங்களை பாதுகாப்பது மற்றும் புதிய மரக்கன்றுகளை நடவு செய்வதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள் மத்தியில், புவி வெப்பமயமாதலை தடுக்க, மரக்கன்றுகளை நடுவது மற்றும் அவற்றை பாதுகாப்பதின் அவசியத்தை கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து கடந்த, 2012ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில், பள்ளிக் கல்வித்துறை சார்பாக சுற்றுச் சூழல் மன்றத்தை உருவாக்கியது.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமித்தது, அவர்கள் மூலம் தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும், மரக்கன்றுகள் நடவு செய்ய மற்றும் அவற்றை பராமரிக்க தேர்ந்தெடுக்கப்படும், ஒவ்வொறு பள்ளிகளுக்கும் தலா, இரண்டாயிரத்து 500 ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிகளிலும் தலா, 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தர்மபுரி மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் கூறியது:
பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவுபடி தர்மபுரி மாவட்டத்தில், சுற்றுச் சூழல் மன்றம் 159 பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மத்தியில் மரக்கன்றுகளை வளர்க்கும் ஆர்வத்தை கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் மற்றும் சி.இ.ஓ., மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

அவர்களின் ஆலோசனைபடி மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பட "சிடி", 159 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மரக்களின் பயன் குறித்த புத்தகங்கள், 159 பள்ளிகளுக்கும் தலா, ஐந்து புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2013-2014ம் ஆண்டும் மேலும், 100 பள்ளிகளில் சுற்றுச் சூழல் மன்றம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுச் சூழல் மன்றம் சார்பாக, நம் பள்ளி, நம் தோட்டம் என்பதை வலியுறுத்தி, வனத்துறை உதவியுடன், தமிழகத்தில் முன் மாதிரியாக மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகளில் 36, 600 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தர்மபுரி யூனியனில் உள்ள 154 பள்ளிகளில் 4,280 மரக்கன்றுகளும், நல்லம்பள்ளி யூனியனில் உள்ள 190 பள்ளிகளில் 5,370 மரக்கன்றுகளும், பென்னாகரம் யூனியனில், 229 பள்ளிகளில் 6,410, பாலக்கோடு யூனியனில், 164 பள்ளிகளில், 4,380. காரிமங்கலம் யூனியனில், 160 பள்ளிகளில், 4,200, மொரப்பூர் யூனியனில், 164 பள்ளிகளில், 4,460, பாப்பிரெட்டிப்பட்டி யூனியனில், 107 பள்ளிகளில், 3,700, அரூர் யூனியனில், 162 பள்ளிகளில், 4,300 மரக்கன்றுகள் என, 36 ஆயிரத்து, 600 மரக்கன்றுகள் நடமுடிவு செய்யப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் நடும் விழா விரைவில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.