Pages

Tuesday, July 16, 2013

அரசு பள்ளிகள் தரம் உயர்வு பட்டியல் தாமதம்: மாணவர் எண்ணிக்கை சரிவு

தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளின் பட்டியல், தாமதமாக வெளியிடப்பட்டதால், மாணவர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
 
சட்டசபையில் கல்வித்துறை மானியக்கோரிக்கையில், "100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலையாகவும்; 50 க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும்" என, அறிவிக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறக்கும் வரை தரம் உயர்ந்த பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியாகவில்லை. தரம் உயர்வுக்கான அறிகுறி இருந்த நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் இறுதி வகுப்பு முடித்த மாணவர்களை தக்க வைக்க, இறுதி வரை முயற்சித்தனர். வேறு வழியின்றி, கடைசி நேரத்தில் டி.சி., கொடுத்ததால், வேறு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து விட்டனர்.

இந்நிலையில், தரம் உயர்ந்த அரசு பள்ளிகளின் பெயர் பட்டியலை, மாவட்டம் வாரியாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம், தற்போது வெளியிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில், இ.மலம்பட்டி, வேம்பத்தூர் பெரியகோட்டை, உலகம்பட்டி அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. "இதே போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த அளவிலான பள்ளிகளே, தரம் உயர்த்தப்பட்டு உள்ளன; வகுப்புகள் துவங்கிய நிலையில், பட்டியல் வெளியாகி இருப்பதால் 9, பிளஸ் 1 வகுப்பிற்கு மாணவர்களை சேர்ப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது" என, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "பட்டியல் தாமதமாக கிடைப்பதால், தரம் உயர்ந்த அரசு பள்ளிகளில் போதிய மாணவர்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டு எதிர்பார்க்க முடியாது. தரம் உயர்ந்த பள்ளிகளில் இருந்து, வெளியே சென்ற மாணவர்களை, மீண்டும் அதே பள்ளிக்கு அழைத்து வர முயற்சிக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.