Pages

Monday, July 1, 2013

நெட் தேர்வு: தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் பங்கேற்பு

பல்கலைக்கழக மானிய குழு சார்பில் நடத்தப்படும், கல்லூரி விரிவுரையாளர் தகுதிக்கான, தேசிய தகுதி தேர்வு (நெட்) நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.

பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) தேசிய தகுதி தேர்வை (நெட்), ஜூன், டிசம்பர் ஆகிய இரு மாதங்களில் நடத்துகிறது. மாநில அளவில் நடத்தப்படும் "ஸ்லெட்,&' அகில இந்திய அளவில் நடத்தப்படும், "நெட்" தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில், வெற்றி பெற்றவர் மட்டுமே, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளராக பணிபுரிய தகுதி பெறுகின்றனர்.

இந்தாண்டிற்கான, "நெட்" நுழைவு தேர்வு, நாடு முழுவதும், 79 இடங்களில் நேற்று நடந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில் நடத்தப்பட்டது. சென்னை பல்கலைக்கழக மண்டலத்திற்கு உட்பட்ட, 13 மையங்களில், 13 ஆயிரம் பேர் எழுதினர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக மண்டலத்தில், நான்கு மையங்களில், 2,380 பேர், மதுரை காமராஜ் பல்கலைக்கழக மண்டலத்தின், 15 மையங்களில், 8,260 பேரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மண்டலத்தின், ஏழு மையங்களில், 6,360 பேரும் என, மொத்தம், 39 மையங்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.

தேர்வுகள், காலை, 9:30 மணிக்கு துவங்கி, 4:00 மணிக்கு முடிந்தது. "நெட்" தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட பின், இரண்டாவது முறையாக, நடைபெற்ற தேர்வு இதுவாகும். தேர்வு முடிவுகள், இரண்டு மாதத்தில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.