Pages

Monday, June 3, 2013

கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது பாரதியார் பல்கலைக்கழகம்

இந்த கல்வியாண்டு முதல், தான் வசூலிக்கும் பல்வேறு கட்டணங்களை உயர்த்தும் முடிவை கோவை பாரதியார் பல்கலைக்கழகம் எடுத்துள்ளது. ஏப்ரல் 16ம் தேதி நடைபெற்ற பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த 2013-14 கல்வியாண்டு முதல், பல்கலையின் இணைப்பு கல்லூரிகள், பல்கலைக்கு செலுத்தும் கட்டணங்களில் 25% உயர்த்தப்பட்டுள்ளது என்ற தகவல், பல்கலை பதிவாளர் மூலமாக, அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை, முதுநிலை படிப்புகளை பதிவு செய்தல், தமிழகம், தமிழகத்திற்கு வெளியே மற்றும் வெளிநாடு ஆகியவற்றில் பதிவுசெய்தல், மெட்ரிகுலேஷன், நிர்வாகம், விளையாட்டு, நூலகம், விதிவிலக்கு/லேட்டரல் என்ட்ரி/பிரைவேட் ஸ்டடி, ஸ்போர்ட்ஸ் இணைப்பு, மாறுதல், மாறுதல் மற்றும் அதனையடுத்த மறுசேர்க்கை, மறுசேர்க்கை, பெயர் மாற்றம் மற்றும் தன்னாட்சி கட்டணம் ஆகிய விஷயங்களில் கட்டணங்கள் 25% உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், கற்பித்தல் மொழி தொடர்பான அம்சத்திற்கு கட்டணம், ரூ.100லிருந்து ரூ.500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவைதவிர, Campus Placement என்ற பெயரில், ரூ.50 மாணவர்களிடமிருந்து, பல்கலையால் வசூலிக்கப்படுகிறது.

கடந்த 2011-12ம் ஆண்டிலேயே கட்டணம் உயர்த்தப்பட்டாலும், இந்தமுறை செய்யப்பட்ட உயர்வானது, மாணவர்களின் தலையில் அதிக சுமையேற்றுவதாக உள்ளது. ஆனால், இந்தக் கட்டண உயர்வானது, UGC மற்றும் அரசு விதிமுறைகளின்படியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை தெரிவித்துள்ளார்.

அதேசமயம், பல்கலையின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பிச்சாண்டி, இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளதுடன், இதனால் மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளதுடன், மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலையே ஏற்படும் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: புதிய கல்லூரிகளை தோற்றுவித்தல், இலவச கல்வி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் இலவச லேப்டாப்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறான நடவடிக்கைகளை அரசு எடுத்துவரும் நிலையில், இந்த கட்டண உயர்வு நடவடிக்கை முரண்பாடாக உள்ளது. அதிக மாணவர்களை உயர்கல்வி என்ற வட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்ற அரசின் முயற்சிக்கு, இந்த கட்டண உயர்வு நடவடிக்கை பெரும் தடைக்கல்.

சமீபத்தில்தான் கட்டணம் உயர்த்தப்பட்டது, எனவே, அடிக்கடி கட்டண உயர்வு என்பதை நினைத்துப் பார்க்க முடியாது. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளால், வழக்கமான உயர்வைவிட, கல்லூரிகள், அதிகமான கட்டணத்தை மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் அபாயமும் உண்டு. எனவே, இந்த கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.