Pages

Thursday, June 20, 2013

தேர்வுக்குழு அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட வீராங்கனை

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவில், இரண்டாம் இடத்தை பிடித்த வீராங்கனை, "மருத்துவ படிப்பில் சேர தகுதியில்லை" என தேர்வுக் குழுவினர், கடைசி நேரத்தில் அறிவித்ததால், அவரின், பி.இ., படிக்கும் வாய்ப்பும் பறிபோனது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய படிப்புகளில், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினர்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்தது.

இவர்களில், விளையாட்டு பிரிவின் கீழ், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, குறிப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்படும், மூன்று இடங்களுக்கு, இந்த ஆண்டு, 268 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், தகுதியின் அடிப்படையில், 12 பேரை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர், செயலர் தலைமையிலான குழு, சான்றிதழ் பரிசீலனைக்கு அழைத்திருந்தது.

விளையாட்டு போட்டிகளில் அவர்கள் பெற்ற புள்ளிகளின்படி, முதல், ஆறு பேரை, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க, தகுதியானவர்களாக அறிவித்தது.

இந்நிலையில், "சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லைச் சேர்ந்த, "டென்னி காய்ட்" விளையாட்டில் வீராங்கனையான, நித்யலட்சுமி, வேதியியல் பாடத்தில், 118 மதிப்பெண்கள் தான் பெற்றுள்ளார். பி.சி., பிரிவைச் சேர்ந்த அவர், மருத்துவ படிப்பில் சேர, முக்கிய பாடங்களில் ஒன்றான வேதியியலில், குறைந்தபட்சம், 120 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எனவே, அவர், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர முடியாது" என தேர்வுக் குழுவினர், கடைசி நேரத்தில், அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

செய்வதறியாமல் கண்கலங்கி நின்ற நித்யலட்சுமியின் தாய் ஆனந்தி, பி.இ., படிப்பில் சேர, பி.சி., பிரிவினர், முக்கிய பாடங்களில் குறைந்தபட்சம், 45 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும் என்ற தகவல் கிடைத்ததும், சற்று ஆறுதல் அடைந்தார்.

ஆனால், நேற்று முன்தினம் துவங்கிய, பி.இ., விளையாட்டு பிரிவு மாணவர் சேர்க்கையில், பி.சி., பிரிவினருக்கான இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டிருந்ததால், பி.இ., சேரவும், நித்யலட்சுமிக்கு வாய்ப்பில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த, நித்யலட்சுமியின் தாய் ஆனந்தி, கண்ணீர் மல்க கூறியதாவது: பிளஸ் 2 பொதுத் தேர்வில், என் மகள், பாட வாரியாக எடுத்த மதிப்பெண் விவரங்களை, மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பத்தில் தெளிவாக தெரிவித்துள்ளோம்.

தற்போது, நித்யலட்சுமி மருத்துவம் சேர தகுதியில்லை எனக் கூறும் இதே அதிகாரிகள் தான், விளையாட்டு பிரிவுக்கான கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுத்து, அவளின், விளையாட்டு சான்றிதழ்களையும் சரிபார்த்தனர். தற்போது, கலந்தாய்வும் முடிந்தபின், திடீரென அவள், எம்.பி.பி.எஸ்., சேர முடியாது என, அறிவித்தது நியாயமில்லை.

அதிகாரிகளின் மெத்தனப்போக்கால், என் மகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. என் கணவர் மோகன், பழ வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். எங்கள் குடும்பத்தின் ஏழ்மையையும், நித்யலட்சுமியின் விளையாட்டு திறனையும் கருத்தில் கொண்டு, அவளுக்கு, விளையாட்டு பிரிவின்கீழ், பி.இ., படிப்பில் இடம் கிடைக்க, தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும். பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ள அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, ஆனந்தி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.