Pages

Tuesday, May 21, 2013

1080 மதிப்பெண் பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவருக்கும் முழு கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 1080 மதிப்பெண் பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கும் இந்த ஆண்டு தங்கள் அறக்கட்டளை சார்பில் முழு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி தெரிவித்தார்.
காரமடையை அடுத்த மருதூரில் அமைந்துள்ள அருள்மிகு அனுமந்தராயசாமி திருக் கோயிலில் வைகாசி முதல் சனிக்கிழமை விழா, 8-ஆம் ஆண்டு விழா, ஓ.ஆறுமுகசாமிக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா, சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி தலைமை வகித்தார். தமிழக ஒக்கலிகர் மகாஜன சங்க மாநிலத் தலைவரும், முன்னாள் டிஎஸ்பியுமான ஆர்.வெள்ளிங்கிரி, ஊர் கவுடர் சாம்ராஜ், எஸ்எம்டி நிறுவனங்களின் தலைவர் கே.கல்யாணசுந்திரம், டிஆர்எஸ் கார்டன்ஸ் நிர்வாகி சண்முகசுந்திரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவிதா கல்யாணசுந்திரம், வனஜா சந்திரசேகர், விஜயலட்சுமி சண்முகசுந்திரம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். ஸ்ரீ ஆஞ்சநேயா அறக்கட்டளை தலைவர் கனகராஜ் (எ) வீரபத்திரசாமி வரவேற்றார்.

விழாவில் காரமடை பகுதியில் சிறப்பு மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி நிதியுதவிகளை வழங்கி ஓ.ஆறுமுகசாமி பேசியது:

நன்கு கல்வி கற்கும் ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெற கடந்த 1990 முதல் விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் இலவச கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 35,000 மாணவ, மாணவியருக்கு ரூ. 270 கோடி மதிப்பில் கல்வி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வரும் 25, 26-ஆம் தேதிகளில் கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் விழாவில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 48,000 மாணவ, மாணவியருக்கு ரூ. 84 கோடி அளவில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் விஜயலட்சுமி அறக்கட்டளையின் மருத்துவப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, முன்னாள் ஊராட்சித் தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

கடந்த பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற புஜங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளி, சீளியூர் துரைசாமி கவுடர் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளி மாணவ, மாணவியருக்கு காரமடை எஸ்எம்டி குரூப் மற்றும் டிஆர்எஸ் டெவலப்பர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கல்வி நிதி உதவிகள் வழங்கப்பட்டன

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.