Pages

Monday, April 1, 2013

10ம் வகுப்பு விடைத்தாள் நாசம்: ரயில்வே மீது வழக்கு

"பத்தாம் வகுப்பு விடைத் தாள்களை தவறவிட்ட, ரயில்வே நிர்வாகம் மீது வழக்கு தொடரப்படும்" என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில், ஒரே மையத்தில், 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் எழுதிய, 170க்கும் மேற்பட்ட மாணவர்களின் விடைத் தாள்கள் கடந்த, 29ம் தேதி, பி.முட்லூர் போஸ்ட் ஆபீசில் ஆர்.எம்.எஸ்., மூலம், விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, ரயிலில் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில், விடைத் தாள் பண்டல், ஒன்று கீழே விழுந்தது. அடுத்தடுத்து ரயில்கள் ஏறியதால், விடைத்தாள் பண்டல் சின்னா பின்னமானது. கிடைத்த விடைத் தாள்களை சேகரித்த, ரயில்வே ஊழியர்கள், தேசமடைந்த விடைத் தாள்களை தீயிட்டு கொளுத்தினர்.

கடந்த, 2010ம் ஆண்டு, திருச்சி மாவட்டம், முசிறியில் தேர்வெழுதிய மாணவர்களின் அறிவியல் விடைத் தாள்கள், பஸ்ஸில் கொண்டு செல்லும் போது மாயமானது. அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது.

ஆனால், "பாதிக்கப்பட்ட மாணவருக்கு மறுதேர்வு நடத்தப்படாது. தமிழ் முதல் தாளில் பெற்ற மதிப்பெண்களே, இரண்டாம் தாளுக்கும் வழங்கப்படும்" என்று தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில், நேற்று முன்தினம் இரவு நடந்த, தமிழக அரசின் பட்ஜெட் விளக்கக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் பங்கேற்று பேசினார்.

கூட்டத்துக்கு பின், நிருபர்களிடம் பேசுகையில், "10ம் வகுப்பு விடைத் தாள்களை தவறவிட்ட, ரயில்வே நிர்வாகம் மீது வழக்கு தொடரப்படும்" என்று அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.