கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக மார்ச் 21ஆம் தேதி “உலக சிட்டுக்குருவிகள் தினம்” மற்றும் “உலக வனநாள் தினம்” கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியர் பத்திரம்மாள் தலைமை வகித்தார். பள்ளியின் பிற ஆசிரியர்கள் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதைப் பற்றியும் காடுகளின் இன்றியமையாமையைப் பற்றியும் சிற்றுரை ஆற்றினார்கள்.
கணித ஆசிரியர் திருமுருகன் பேசும்போது, “அழிந்து வரும் சிற்றினமாகிய சிட்டுக்குருவிகள், டெங்கு கொசுப்புழுக்களை உண்ணும் வழக்கமுடையவை; ஆனால் தற்போது சிட்டுக்குருவியினங்கள் அழிந்து வருவதால் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது” என்றார். மேலும் ஆங்கில ஆசிரியை முனியம்மாள் உரையாற்றும்போது “அதிகரித்து வரும் செல்போன் டவர்களும் மரங்களை வெட்டுவதுமே குருவிகளின் எண்ணிக்கை குறைய காரணமாகிறது” என்ற கருத்தை முன்வைத்துப் பேசினார். ஆசிரியர் ரவிக்குமார் தனது உரையில் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதைத் தடுப்பதில் மாணவர்களின் பங்கு என்ன என்பதைப் பற்றிக் கூறினார்.மேலும் ஆசிரியைகள் அமுதா மற்றும் அங்கையற்கண்ணி ஆகியோர் மரங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினர்.
விழாவில் சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க நீருள்ள குவளைகள்,சிறு தானியங்களுள்ள குவளைகள்,தேங்காய் நார்கள் மற்றும் தென்னங்குச்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய, மாணவர்களாலேயே அட்டைகளினால் செய்யப்பட்ட “குருவிகள் பாதுகாப்பு வீடுகள்” காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஒவ்வொருவரும் தனது வீட்டின் மாடியில் வைத்து பராமரிக்கும் முறையும் அறிவுறுத்தப்பட்டது.
விழா இறுதியில் மாணவர்கள் மரங்களையும் சிட்டுக்குருவிகளையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.