"பாடங்களைப் புரிந்து கொண்டு படித்தால், தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்" என, கலெக்டர் தீபக்குமார் பேசினார்.
தொன்போஸ்கோ வழிகாட்டி மற்றும் புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சமுதாய நலப்பணித் திட்டம் (சிஎஸ்எஸ்) இணைந்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு வழிகாட்டும் வகையில், "வெற்றி உறுதி&' நிகழ்ச்சி, வில்லியனூர் ஆச்சாரியா பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது.புதுச்சேரி தொன் போஸ்கோ வழிகாட்டி மைய இயக்குனர் எட்வர்ட் வரவேற்றார். சென்னை மைய இயக்குனர் ஜோசப் லியோ, தொன்போஸ்கோ வழிகாட்டி மையத்தின் கல்விப் பணிகள் மற்றும் பொதுத் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை விளக்கினார்.
கலெக்டர் தீபக்குமார் தலைமை தாங்கி பேசுகையில், "பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி, தேர்வு வைத்து தயார்படுத்தி இருப்பார்கள். அனைவரும் கட்டாயம் வெற்றி பெறுவீர்கள். மொழிப்பாடம், அறிவியல் பாடங்களைப் புரிந்து படித்தால் மிகவும் நல்லது. தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களை அனுபவித்துப் படிக்க வேண்டும். அறிவியலைப் புரிந்து படிக்க வேண்டும். பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதுங்கள். பின்தங்கிய மாணவர்கள் நன்கு படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்&' என்றார்.
நாவலர் பள்ளி ஆசிரியை ஜெயஸ்ரீ ஆங்கிலப் பாடத்திற்கும், சேலியமேடு வாணிதாசனார் பள்ளி தலைமை ஆசிரியர் வீரப்பன் கணிதப் பாடத்திற்கும், பண்டசோழநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பசுபதிராஜன் அறிவியல் பாடத்திற்கும், சிறப்பு வகுப்பு நடத்தி, மாணவர்களின் சந்தேகத்திற்கு விளக்கம் அளித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் திமோத் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment