Pages

Tuesday, February 19, 2013

கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நீடிக்கும் குழப்பம்

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்ட நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவுகிறது.அரசு கல்லூரிகளில், 1,093 பணியிடங்களும், அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில், 3,120 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. இந்தப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது.

டி.ஆர்.பி., மூலம் போட்டி தேர்வு நடத்தாமல், பணி அனுபவம், நேர்முக தேர்வின் மூலமாக தேர்வு நடத்த போவதாக தெரிவிக்கப்பட்டது. பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக, 15 மதிப்பெண்ணும், நேர்முக தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும், பி.எச்டி., பட்டத்துக்கு, 9 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.

பி.எச்டி., பட்டம் பெறாமல் எம்.பில்., பட்டத்துடன் நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், 6 மதிப்பெண்ணும், முதுகலை பட்டத்துடனம், நெட், ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருந்தால், 5 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.

போட்டி தேர்வு மூலம் தேர்வு நடைபெறாமல், நேர்முக தேர்வுக்கும், அனுபவத்துக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால், முறைகேடுகள் அதிகளவில் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போட்டி தேர்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவி வருகிறது. தமிழகத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்கள், கல்லூரி நிர்வாகம் மூலமே நிரப்பப்படுகின்றன. இதனால், அதிகளவில் பணம் விளையாடுவதாகவும் கூறப்படுகிறது.

இப்பணியிடங்கள், ஏழு முதல் 10 லட்ச ரூபாய் வரை விலை போவதாகவும் கூறப்படுகிறது. கேரள மாநிலத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை அரசு நிரப்புகிறது. ஆனால், தமிழகத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை, கல்லூரி நிர்வாகங்களே நிரப்புகிறது. இதனால், அதிகளவில் முறைகேடுகள் நடைபெறுகிறது.

எனவே, தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்தில், திருத்தம் கொண்டு வந்து, அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை அரசே நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செயலர் பிச்சாண்டி கூறியதாவது: மாணவர்களுக்கான நேர்முக தேர்வுகளையே ரத்து செய்ய போராடும் நிலையில், நெட், ஸ்லெட் தேர்வுகளில் ஏற்கனவே வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு வைப்பது தவறான செயல்.

போட்டி தேர்வு நடத்தாமல், இப்போது இருக்கும் தேர்வு முறைகளிலேயே, ஒழுங்குபடுத்தி, நேர்மையான தேர்வு நடைபெற வேண்டும். கல்லூரி ஆசிரியர் தேர்வு பற்றி, அமைச்சர் தலைமையிலான குழு விரைவில் விவாதித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு பிச்சாண்டி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.