Pages

Thursday, February 14, 2013

உயர் கல்வி தேர்வு முடிவுகள் ஒரே நேரத்தில் வெளியிட கோரிக்கை

தன்னாட்சி கல்லூரிகளும், அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டால் மட்டுமே, ஒற்றை சாளர முறையில், மாணவர்கள் குழப்பமின்றி விண்ணப்பிக்க முடியும். இதுகுறித்து, தமிழ்நாடு
உயர்கல்வி மன்றம் விரைந்து முடிவெடுக்க வேண்டும்" என, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொறியியல் படிப்பை போல, கலை அறிவியல் படிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என, நீண்ட காலமாக, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, 11 பல்கலைக்கழகங்களில் ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. முதல் கட்டமாக, எம்.ஏ., எம்.எஸ்சி., உள்ளிட்ட கலை அறிவியல் படிப்புகளில், ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தவும், வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தவும், தமிழ்நாடு உயர்கல்வி மன்றம், மாநில அரசுக்கு பரிந்துரைந்துள்ளது.

பொறியியல் படிப்பிற்கு, மாநிலம் முழுவதும், ஒரே பல்கலைக்கழகத்தின் கீழ் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆனால், கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 11 பல்கலைக்கழகங்கள் உள்ளதால், அந்தந்த பல்கலைக்கழகங்களில் ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பல்கலைகக்கழக ஆசிரியர் சங்க செயலர் பிச்சாண்டி கூறியதாவது: ஒற்றை சாளர முறையிலான மாணவர் சேர்க்கையால் மட்டுமே, உயர் கல்வி வணிகமயமாவதைத் தடுக்க முடியும். எந்தச் சிக்கலுமின்றி அமல்படுத்த, தனியார் கல்லூரிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

கலை அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு பாடவாரியாக கலந்தாய்வு நடத்த வேண்டும். மேலும், தன்னாட்சி கல்லூரிகளும், அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி, முடிவுகளை வெளியிட்டால் மட்டுமே, ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் குழப்பமின்றி விண்ணப்பிக்க முடியும்.

ஒற்றை சாளர முறையும் வெற்றி பெறும். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தில், விரைவில் நடக்க உள்ள தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கூட்டத்தில், இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு பிச்சாண்டி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.