டி.இ.டி. தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,718 பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பணி நியமன கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில், மாநிலம் முழுவதும் நேற்று சுறுசுறுப்பாக நடந்தது. 8,718 பேரில், 6,418 பேருக்கு, அதிர்ஷ்டம் அடித்தது. இவர்கள் அனைவருக்கும், அவரவர் சொந்த ஊர்களிலேயே வேலை கிடைத்தன.
டி.இ.டி., தேர்வில், 9,664 இடைநிலை ஆசிரியர், 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் என, 18 ஆயிரத்து, 382 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும், மூன்று நாள் பணி நியமன கலந்தாய்வு, நேற்று துவங்கியது. முதல்கட்டமாக, பட்டதாரி ஆசிரியர், சொந்த மாவட்டத்தில், பணி பெறுவதற்கான கலந்தாய்வு, நேற்று, "ஆன்-லைன்&' வழியில் நடந்தது.
சென்னை மாவட்டத்தில், எந்த பாடத்திலும், காலி பணியிடங்கள் இல்லை. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கணிதம் பாடத்தை தவிர, இதர பாடங்களில், கணிசமான அளவிற்கு, காலி இடங்கள் இருந்தன. தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில், அதிகளவில் காலி பணியிடங்கள் இருந்தன.
தர்மபுரியில் மட்டும், 800 பணியிடங்கள் காலியாக இருந்தது. நேற்று பிற்பகல் முதல், கலந்தாய்வு நடந்தது. சொந்த மாவட்டங்களில், அதிக காலியிடங்கள் இருந்ததால், ஆசிரியர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, மாலை, 6:30 மணிக்குள், 6,418 பேர், அவரவர் சொந்த ஊர்களிலேயே, பணியிடங்களை தேர்வு செய்தனர்.
பட்டதாரி ஆசிரியர் மொத்த பணியிடங்களில், 73.61 சதவீதம் பேருக்கு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே வேலை செய்யும் அதிர்ஷ்டம் அடித்ததால், புதிய ஆசிரியர் மத்தியில் இது குஷியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, பள்ளி கல்வி இணை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது: அதிகமானோருக்கு, சொந்த மாவட்டங்களிலேயே இடங்கள் கிடைத்து விட்டன. 2,000 பேர் மட்டும், வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கணித பாடத்தை தவிர, இதர பாடங்களில், காலி பணியிடங்கள் அதிகம் உள்ளன. எனவே, சென்னை மாவட்டத்தில் தேர்வு பெற்ற 165 பேரும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பணியில் சேரலாம். இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்தார்.
சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த காலி பணியிடங்கள், ஒளிவு மறைவின்றி, "ஆன்-லைன்" வழியில் காட்டப்பட்டன. சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து தேர்வு பெற்றவர்கள், மேற்கண்ட இடங்களில் உள்ள பள்ளிகளை, "ஜாக்பாட்" அடித்தது போல், மகிழ்ச்சியுடன் தேர்வு செய்தனர்.
இரண்டாவது நாளான இன்று, பட்டதாரி ஆசிரியர்கள், சொந்த மாவட்டத்தில் இருந்து, வெளி மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு நடக்கிறது. நேற்று, சொந்த மாவட்டங்களில் இடம் கிடைக்காத ஆசிரியர்கள், இன்றைய கலந்தாய்வில் பங்கேற்பர்.
நாளையுடன், 18, 382 பேர் பணி நியமனத்திற்கான பணிகளும் முடியும். அதைத் தொடர்ந்து, 13ம் தேதி, சென்னையில் நடக்கும் விழாவில், 18 ஆயிரம் பேருக்கும், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன உத்தரவுகளை வழங்குகிறார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.