Pages

Wednesday, December 5, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு மூலம் 18,382 ஆசிரியர்கள் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் 18,382 பேர் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9,664 பேர் இடைநிலை ஆசிரியர்களாகவும், 8,718 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1,567 பேர் தகுதி பெறவில்லை.
இந்தத் தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதிப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை மாதம் நடைபெற்றது. மொத்தம் 6.60 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வில் 2,448 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

தமிழகத்தில் 19 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 9 ஆயிரத்துக்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து, மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த மறுதேர்வு முடிவுகள் நவம்பர் 2-ம் தேதி வெளியிடப்பட்டன. மறுதேர்வில் 19,243 பேர் (புதுச்சேரியையும் சேர்த்து) வெற்றி பெற்றனர். மறுதேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு நவம்பர் 6 முதல் 9 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதன்பிறகு, தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான இறுதிப்பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 1,416 பேரும், இரண்டாம் தாளில் 649 பேரும் பணி நியமனத்துக்கு தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டனர். மறுதேர்வில் முதல் தாளில் 9,205 பேரும், இரண்டாம் தாளில் 8,703 பேரும் ஆசிரியர் நியமனத்துக்கு தகுதியானவர்களாக இருந்தனர். இரண்டுத் தேர்வுகளையும் சேர்த்து மொத்தம் 19,343 பேர் ஆசிரியர் நியமனத்துக்குத் தகுதியானவர்களாக இருந்தனர்.

இதில் 956 பேர் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் என இரண்டுக்கும் தகுதி பெற்றிருந்தனர். அவர்கள் விருப்பம் தெரிவித்தவாறு ஏதேனும் ஒரு பணிக்கு மட்டும் அவர்களின் பெயர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. 5 பேர் தகுதிச் சான்றிதழ் மட்டுமே போதும் என்று தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து 18,382 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 9,664 பேர் இடைநிலை ஆசிரியர்களாகவும், 8,718 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைகளில் சில நாள்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. பணி நியமனத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 2 ஆயிரம் பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.