Pages

Tuesday, October 16, 2012

2012 ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 2,246 பேருக்கு முதலில் பணி நியமனம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 2,246 பேருக்கு முதலில் பணி நியமனம் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் பிறகே, ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பணி நியமனம் வழங்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை மூலம் நிரப்பப்பட உள்ளன.

முதலில் 2,246 பேர் தேர்வு செய்யப்படுவதால், "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை பின்பற்றப்பட்டாலும் பெரும்பாலும் இவர்களில் தகுதியான அனைவருக்கும் பணி நியமனம் கிடைத்துவிடும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்களுக்கு ஓரிரு வாரங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூலை 12-ல் நடைபெற்றது. 6.6 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பில் 202 பேர் உரிய தகுதிகளுடன் இல்லாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

2,246 பேருக்கு பணி நியனம் வழங்கப்பட இருந்த நிலையில், ஆசிரியர் நியமனம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களை பணியில் நியமிக்கக் கூடாது என்றும், ஆசிரியர் நியமனத்துக்கு என தனியாக தேர்வு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக, 2,246 பேருக்கு பணி நியமனம் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான உயர் நிலைக் குழு "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தலாம் என அரசுக்குப் பரிந்துரை செய்தது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், பி.எட் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் பட்டயத் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க தமிழக அரசு ஆணையிட்டது. இந்த "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனமும் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்பட்டுள்ள நிலையில் ஏற்கெனவே தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் இப்போது ஒன்றாக பணி நியமனம் நடத்தப்படுமா என்று சிலர் சந்தேகங்களை எழுப்பினர்.

இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்த நேரத்தில் (90 நிமிஷங்கள்) கடினமான கேள்விகளுக்கு சிறப்பாக விடையளித்து இவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, மறுதேர்வில் கூடுதல் நேரத்தில் (3 மணி நேரம்) தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களுடன் இவர்களை ஒப்பிட முடியாது. அதோடு, தகுதித் தேர்வில் ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ள அவர்களுக்கு முன்கூட்டியே பணி நியமனம் வழங்குவதுதான் இயற்கை நீதி ஆகும்.

புதிய தேர்வு முறையின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியவுடன் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

2 comments:

  1. useful info. we have passed in TET already and we are awaiting for the posting. govt. should not delay the postings else some other mad people will file the case

    ReplyDelete
    Replies
    1. kastapattu prepare panni pass onvugalukkelam romba manasu kasttamathan irrukkum ennasaivathu. you don't worry God give good opportunity to you.

      Delete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.