பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு,
வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில், சில சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேசமயம், பள்ளிகளில், ஒரே நாளில் லட்சக்கணக்கான மாணவர்கள், பள்ளிகளில்
வேலை வாய்ப்பு அலுவலக பதிவிற்கு முயன்றதால், இணையதளம் முடங்கியது.
சென்னையில்,
காலை 11 மணியில் இருந்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதை
பெறுவதற்கு, மாணவர்கள் கூட்டம் கூட்டமாக ஆர்வத்துடன் வந்தனர். மதிப்பெண்
சான்றிதழில் உள்ள விவரங்களை, மாற்றுச் சான்றிதழில் (டிசி) பதிவு செய்த
பின், இரு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. எழும்பூர் மாநில மகளிர்
மேல்நிலைப்பள்ளி மாணவியர் 395 பேருக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மடி கணினி: மாநிலம்
முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ,
மாணவியருக்கு, இலவச மடி கணினிகள் ஓரளவு மட்டுமே வழங்கப்பட்டன. இதனால்,
மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் பின்பக்கம், "லேப்-டாப் நாட் இஷ்யூடு"
என்றும்; வழங்கப்பட்ட மாணவ, மாணவியரின் சான்றிதழில், "லேப்-டாப் இஷ்யூடு"
என்றும் முத்திரையிடப்படுகிறது. இலவச மடி கணினி வாங்காத மாணவர்,
கல்லூரியில் சேர்ந்த பின் பெற்றுக் கொள்ள வசதியாக, இந்த
முத்திரையிடப்படுவதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கூடுதல் அம்சங்கள்:
மதிப்பெண் சான்றிதழில், "லைன் பிரின்டர்" முறையில் அச்சிடப்பட்டதற்கு
பதிலாக, "லேசர் பிரின்ட்" மூலம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனால், மதிப்பெண்
சான்றிதழ் நேர்த்தியாக உள்ளது. சான்றிதழின் இடப்பக்கத்தில், கறுப்பு -
வெள்ளையில் மாணவரின், "பாஸ்போர்ட்" அளவில் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
சான்றிதழின் வலப்பக்கத்தின் மேல் பகுதி
மற்றும் வலப்பக்க ஓரம் என, "2டி" பார்கோடு இடம்பெற்றுள்ளது. சான்றிதழில்
உள்ள மாணவரின் பெயர், படித்த பள்ளி, தேர்வெழுதிய ஆண்டு, பாட வாரியாக பெற்ற
மதிப்பெண்கள், பிறந்த தேதி, சான்றிதழ் எண், தேர்வு பதிவெண் உள்ளிட்ட
விவரங்கள், இரு, "பார்கோடு"களிலும் இடம்பெற்றுள்ளதாக, தேர்வுத்துறை
வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு, "பார்கோடு" சேதமடைந்தால், மற்றொரு,
"பார்கோடை" பயன்படுத்தி, மாணவரின் விவரங்களை அறிய முடியும்.
பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் - உண்மை தன்மை அறிய புதிய திட்டம்:
உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசின்
வேலைவாய்ப்பு நிறுவனங்கள், விண்ணப்பதாரரின் பள்ளி, பொதுத் தேர்வு குறித்த
உண்மைத் தன்மையை அறிய, மதிப்பெண் சான்றிதழ், "பார்கோடில்" உள்ள
விவரங்களுக்கு, பொதுவான, "பாஸ்வேர்டு" ஒன்றை வழங்க, தேர்வுத் துறை
திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், போலி கல்விச் சான்றிதழ் தயாரிக்கும்
கும்பல்கள் அதிகமாக உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன், பொறியியல் மற்றும்
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக, போலி பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்களை,
ஒரு கும்பல் தயாரித்தது. தேர்வுத் துறை மற்றும் கல்வித்துறை முன்னாள்
ஊழியர் சிலருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருந்ததால், பெரும் பரபரப்பு
ஏற்பட்டது. "கவுன்சிலிங்" நேரத்தில், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
போலிகளுக்கு வாய்ப்பில்லை:
இதையடுத்து, முதல்முறையாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள
சான்றிதழைப் போல், போலி மதிப்பெண் சான்றிதழை அச்சடிக்க முடியாது என,
தேர்வுத் துறை வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவித்தன. பலவிதமான கூடுதல்
பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இரு, "பார்கோடு"களை, போலிகளால் உருவாக்க
முடியாது; மேலும், "ஸ்கேன்" செய்யப்பட்ட மாணவரின் புகைப்படமும் சான்றிதழில்
சேர்த்து இடம் பெற்றிருப்பது, கூடுதல் அம்சம் என, அவர்கள் தெரிவித்தனர்.
விவரம் அறிய: தற்போதைய
நிலையில், "பார்கோடை" பயன்படுத்தி, அதில் உள்ள விவரங்களை, உயர்கல்வி
நிறுவனங்கள் அறிய முடியாது. அண்ணா பல்கலை, மருத்துவக் கல்வி இயக்குனரகம்,
பல்கலைகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., உள்ளிட்ட அரசு
வேலைவாய்ப்பு நிறுவனங்கள், விண்ணப்பதாரரின் பள்ளிக்கல்வி மதிப்பெண்
சான்றிதழ்களில் உள்ள விவரங்கள் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள,
"பார்கோடை ஸ்கேன்" செய்தால், அதில் உள்ள விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பாஸ்வேர்டு: இதற்காக,
பொதுவான, "பாஸ்வேர்டு" வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான பணிகளை, "நிக்"
நிறுவனம் செய்து வருகிறது. மூன்று மாதங்களுக்குள், இப்பணிகள் முடிந்து,
"பாஸ்வேர்டு" விவரம், முக்கியமான கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்பு
நிறுவனங்களுக்கு மட்டும் தெரிவிக்கப்படும் என, துறை வட்டாரங்கள்
தெரிவித்தன.
பார்கோடை ஸ்கேன் செய்து, "பாஸ்வேர்டை" பதிவு
செய்தால், அதில் உள்ள விவரங்கள் கம்ப்யூட்டரில் வந்துவிடும். தனிப்பட்ட
எந்த ஒரு நபருக்கும், "பாஸ்வேர்டு" தெரியாது என்பதால், "பார்கோடை"
பயன்படுத்தி, அதிலுள்ள விவரங்களை அறிய முடியாது என்பது தான், திட்டத்தின்
சிறப்பம்சம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.